சென்னை: கமல் ஹாசன் கனவை ஊடகங்கள்தான் பரபரப்பாக்கி வருகின்றன என அதிமுக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்தார்.
ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அதிமுக ஆட்சியில் ஊழல் நடைபெற்றுவருவதாக கமல் ஹாசன் வெளிப்படையான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார்.
அவர் விரைவில் அரசியல் கட்சி தொடங்கவும் உள்ளதாகவும், அரசியலுக்கு வந்தபிறகு சினிமாவில் நடிக்க மாட்டேன் என கமல் ஹாசன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.
இந்நிலையில், கமல்ஹாசனின் அரசியல் குறித்து தினகரனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த தினகரன், "ஜனநாயக நாட்டில் அனைவருக்கும் அரசியலில் குதிக்கும் உரிமை உண்டு. கட்சி தொடங்கும் எவரும், முதல்வர் கனவு காணுவதில் தவறு கிடையாது.
ஆனால், கமல் ஹாசன் கனவை ஊடகங்கள்தான் ஊதி பரபரப்பாக்கி வருகின்றன. முதல்வர் ஆவதற்கான தகுதி, கட்டமைப்பு சம்பந்தப்பட்டவர்களிடம் இருக்கிறதா என்று பார்க்க வேண்டும் என்றும் வெறும் பரபரப்புக்காக எதையும் எழுதக்கூடாது என்று தெரிவித்தார்.