ஒவ்வொருவரின் வங்கிக் கணக்குகளிலும் ரூ.15 லட்சம் போடுவேன் என மோடி சொன்னாரா?
சென்னை: வெளிநாடுகளில் உள்ள கறுப்புப் பணத்தை மீட்டால், இந்தியாவில் உள்ள ஒவ்வொருவரின் வங்கிக் கணக்குகளிலும் ரூ.15 லட்சம் போடுவேன் என மோடி சொன்னாரா என்பது குறித்து தமிழிசை விளக்கம் அளித்துள்ளார்.
மக்களவைத் தேர்தலின் போது பிரசாரத்தில் பேசிய பிரதமர் மோடி, வெளிநாடுகளில் இருக்கும் கறுப்புப் பணம் அனைத்தும் மீட்கப்பட்டால் இந்தியாவில் இருக்கும் ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கிலும் ரூ.15 லட்சம் பணம் இருப்பில் வைக்கும் அளவுக்கு இருக்கும் என்று கூறினார்.
இது குறித்த செய்திகள் வேகமாகப் பரவியது. அப்போது, மோடி பதவிக்கு வந்து கறுப்புப் பணத்தை மீட்டால் அனைவரது வங்கிக் கணக்கிலும் ரூ.15 லட்சம் போடப்படும் என்றும் தகவல்கள் வெளியாகின.
மோடி பதவி ஏற்றதில் இருந்தே, எதிர்க்கட்சிகள் பலவும், மோடியின் இந்த தேர்தல் வாக்குறுதி குறித்து அவ்வப்போது கூறி கேள்வி எழுப்புவது வழக்கம்.
இந்த நிலையில், மோடி அவ்வாறு கூறினாரா? என்பது குறித்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் டிவிட்டர் பதிவில் விளக்கம் அளித்துள்ளார்.
அதாவது, வெளிநாட்டில் இருக்கும் கறுப்புப் பணம் ஒவ்வொருவருக்கும் ரூ.15 லட்சம் போடும் அளவுக்குப் பதுக்கப்பட்டுள்ளது. அதனை மீட்டு வருவோம் என்றுதான் அவர் கூறினார்.
ஆனால், இந்த உரையைத் திரித்துக் கூறி உங்கள் ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கில் ரூ.15 லட்சம் போடுவதாக மோடி சொன்னாரே என பொய்ப்பிரசாரம் செய்யும் 2ஜி ஊழல் விஞ்ஞானிகள் என்று தமிழிசை தெரிவித்துள்ளார்.