சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மருத்துவ அறிக்கை ஆவணங்கள் வெளியாகியிருக்கும் நிலையில், 'அம்மா நன்றாக இருக்கிறார்கள்' என்று அவ்வப்போது பேட்டி கொடுத்து வந்த சி.ஆர். சரஸ்வதி என்ன சொல்கிறார் என்று பார்க்கலாம்.
சென்னை பெசன்ட் நகரில் உள்ள அதிமுக அம்மா அணியின் துணைப் பொதுச் செயலர் டிடிவி தினகரன் வீட்டில் செய்தியாளர்களை சந்தித்த அவரது ஆதரவாளர் சி.ஆர். சரஸ்வதி, ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்து வந்த மருத்துவர்கள் கூறிய தகவலையே பேட்டியில் நான் கூறினேன். ஜெயலலிதா உடல்நிலை பற்றி நான் தவறான தகவல்களை தரவில்லை என்று மறுத்துள்ளார்.
மேலும் அவர் கூறியதாவது, நாங்கள் கூறிய உண்மையே இன்று மருத்துவ அறிக்கையில் வெளியாகியிருக்கிறது. ஜெயலலிதாவுக்கு அளிக்கப்படும் மருத்துவ சிகிச்சை குறித்து பிரதமருக்கு தெரிவிக்கப்பட்டது.
வீட்டில் சிகிச்சை பெற்றதால் அவர் மருத்துவமனைக்குச் செல்ல விரும்பவில்லை. ஜெயலலிதா சிகிச்சை பற்றி அனைத்து விவரங்களும் மக்களுக்கு தெரிவிக்கப்படும்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது, அவ்வப்போது செய்தியாளர்களை சந்தித்த சி.ஆர். சரஸ்வதி, "அம்மா நன்றாக உள்ளார், அம்மா விரைவில் வீடு திரும்புவார்" என்று பேட்டி அளித்து வந்தது குறிப்பிடத்தக்கது.