மத்திய மேற்கு வங்கக் கடலில் உருவாகியிருந்த மேலடுக்கு சுழற்சியானது மேலும் நகர்ந்துள்ளதால் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பில்லை என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
மத்திய மேற்கு வங்கக் கடலில் உருவாகியிருந்த மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகத்தில் ஓரிரு நாள்களாக மழை பெய்து வந்தது. சில இடங்களில் கனமழையும் பெய்தது. இந்த நிலையில், மேலக்கு சுழற்சியானது மேலும் நகர்ந்து ஒடிஸாவுக்கு சென்றுள்ளது.
இது தொடர்பாக வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியது:
மத்திய மேற்கு வங்கக் கடலில் உருவாகியிருந்த மேலடுக்கு சுழற்சியானது ஆந்திர மாநில கடற்பகுதியில் நிலை கொண்டிருந்தது. தற்போது அங்கிருந்து மேலும் நகர்ந்து மத்திய வடக்கு கடலோர ஆந்திரமும் தெற்கு ஒடிஸா பகுதியும் இணையும் இடத்தில் நிலை கொண்டுள்ளது.
இதன் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும். எங்கும் கனமழைக்கு வாய்ப்பில்லை.
சென்னையைப் பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். கடந்த இரு தினங்களாக காணப்பட்ட இதமான காலநிலை நீடிக்கும். நகரில் சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது என்று தெரிவித்தனர்.
புதன்கிழமை பதிவான மழை நிலவரம் (மி.மீட்டரில்): தருமபுரி - 80, ஒகேனக்கல் - 70, மதுரை திருமங்கலம், தருமபுரி மாவட்டம் பாலக்கோடு, கிருஷ்ணகிரி மாவட்டம் பரூர் - 60.