கழிவுப் பொருள்களை வைத்து உருவாக்கப்பட்ட பொருள்களைக் கொண்டு ஹுண்டாய் தொழிற்சாலை பணியாளர்கள் வியாழக்கிழமை ஆயுதபூஜை கொண்டாடினர்.
ஸ்ரீபெரும்புதூரை அடுத்த இருங்காட்டுக்கோட்டை பகுதியில் கார் உற்பத்தி செய்யும் ஹுண்டாய் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு ஆண்டுதோறும் தொழிற்சாலையில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுப் பொருள்களை வைத்து உருவாக்கப்படும் கடவுள் சிற்பங்களை வைத்தே ஆயுத பூஜை கொண்டாடப்படுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் தொழிற்சாலையில் உள்ள என்ஜின் துறை, பெயின்ட் ஷாப், அசம்ப்ளி ஷாப், பாதுகாப்புத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் தங்களது துறையில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுப் பொருள்களை வைத்தே கடவுள் சிற்பங்கள், கலை பொருள்கள், இயற்கை விவசாயம், நம்ம ஊர் திருவிழா, தஞ்சை பிரகதீஷ்வரர் கோயில், குதிரை சாரட் வண்டி, அனுமன் சிலை, துர்கை அம்மன் ஆகிய வடிவங்களை உருவாக்கி அந்தந்த துறை வளாகத்தில் வியாழக்கிழமை ஆயுத பூஜை கொண்டாடினர்.
பூஜையில், உற்பத்தித் துறையின் முதுநிலை துணைத் தலைவர் கணேஷ்மணி, உற்பத்தி துறையின் நிர்வாக இயக்குநர் எஸ்.டி.நேவ், நிர்வாக துணைத் தலைவர் ஸ்டீபன்சுதாகர் உள்ளிட்ட தொழிற்சாலையின் முதுநிலை அதிகாரிகள், தொழிலாளர்கள் கலந்துகொண்டனர்.