இந்தியப் பொருளாதார நிலை குறித்து பிரதமர் நரேந்திர மோடி விளக்கமளிக்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக வியாழக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
இந்தியப் பொருளாதார நிலை குறித்து பாஜக தலைவர்கள் சுப்பிரமணியன் சுவாமி, யஷ்வந்த் சின்ஹா ஆகியோர் கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளனர். அவர்களது விமர்சனங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடியோ, மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லியோ இதுவரை பதிலளிக்கவில்லை.
நாட்டின் மொத்த உற்பத்தி 5.7 சதவீதமாகக் குறைந்துள்ளது. இதன் காரணமாக லட்சக்கணக்கானோர் வேலை இழந்துள்ளனர். விலைவாசியும் உயர்ந்து வருகிறது.
மத்திய அரசு அறிவித்த பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் காரணமாகவே இந்தியப் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கு பிரதமர் பொறுப்பேற்க வேண்டும். தான் எடுத்த தவறான பொருளாதார நடவடிக்கைக்காக பொது மக்களிடம் பகிரங்கமாக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும்.
நாடு பொருளாதார மந்த நிலையைச் சந்தித்து வருகிறது என்பதை மத்திய அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும். அதனடிப்படையில் அவசர பொருளாதார மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அதற்கு, இன்றைய பொருளாதார நிலை குறித்து முன்வைக்கப்படும் விமர்சனங்களுக்கு பிரதமர் வெளிப்படையாக விளக்கமளிக்க வேண்டும் என்று தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.