மின் இணைப்பு விவகாரத்தில், நீதிமன்றத்தில் போலி ஆவணங்களைத் தாக்கல் செய்தவருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதுதொடர்பாக, அரக்கோணம்,நெடும்புளி கிராமத்தைச் சேர்ந்த டி.ஜெயராமன் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் தெரிவித்துள்ளதாவது:
நெடும்புளி கிராமத்தைச் சேர்ந்த யாகூப் உசேன் என்பவரிடம் நிலம் வாங்கினேன். அந்த நிலத்தில் பம்பு செட், கிணறு, மோட்டார் இணைப்புடன் யாகூப் உசேன் பெயரில் உள்ள மின் இணைப்பை எனது பெயருக்கு மாற்றக்கோரி மின் வாரியத்தில் விண்ணப்பித்திருந்தேன். இந்நிலையில் மின் இணைப்பு வழங்கப்பட்ட நிலம் தனக்குச் சொந்தாமானது என மின் வாரியத்தில் தயாளன் என்பவர் புகார் அளித்தார். இதனால் நான் வாங்கிய நிலத்துக்கு வழங்கப்பட்ட மின் இணைப்பை, சோளிங்கர் மின் வாரிய செயற் பொறியாளர் கடந்த 2004 -ஆம் ஆண்டு ரத்து செய்து உத்தரவிட்டார். மின் வாரிய அதிகாரியின் இந்த உத்தரவை ரத்து செய்து, எனது பெயரில் மீண்டும் மின் இணைப்பு வழங்க உத்தரவிட வேண்டும் என அந்த மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு, நீதிபதி எஸ்.வைத்தியநாதன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, மின் வாரியம் சார்பில் பதில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதில், 'இதுதொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், ஜெயராமன் பெயரில் மின் இணைப்பு வழங்கப்பட்ட நிலம் தயாளன் என்பவருக்கேச் சொந்தமானது என்பது தெரியவந்தது. அதன் பிறகே ஜெயராமன் பெயருக்கு மாற்றப்பட்ட மின் இணைப்பை ரத்து செய்யப்பட்டது' என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் சர்ச்சைக்குரிய அந்த நிலம் யாருக்குச் சொந்தமானது என்பதை கண்டறிய அசல் பத்திர ஆவணங்களைத் தாக்கல் செய்ய பதிவுத் துறை அதிகாரிகளுக்கு நீதிபதி உத்தரவிட்டார். அதன்படி தாக்கல் செய்யப்பட்ட அசல் ஆவணங்களுடன் ஜெயராமன் தாக்கல் செய்த ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டது. அப்போது ஜெயராமன் போலி ஆவணங்களைத் தாக்கல் செய்து, தனது பெயரில் மின் இணைப்பு பெற்றது தெரியவந்தது.
இதனையடுத்து நீதிபதி எஸ்.வைத்தியநாதன், மனுதாரரின் மனுவை தள்ளுபடி செய்து மின்வாரிய அதிகாரிகள் பிறப்பித்த உத்தரவை உறுதி செய்தார். அத்துடன் நீதிமன்றத்தை ஏமாற்ற முயற்சித்த குற்றத்துக்காக மனுதாரருக்கு ரூ. 50 ஆயிரம் அபராதம் விதித்து, இந்த அபராதத் தொகையை வில்லிவாக்கத்தில் உள்ள பாலகுருகுலம் பள்ளிக்கு 4 வாரத்தில் வழங்கவும் உத்தரவிட்டார். மேலும், போலி ஆவணங்களைத் தாக்கல் செய்து நீதிமன்றத்தை ஏமாற்ற முயற்சித்த குற்றத்துக்காக மனுதாரர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்ற பதிவுத் துறை போலீஸில் புகார் கொடுக்கவும், இந்த வழக்கை சம்பந்தப்பட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்றம் விரைந்து விசாரிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.