மதுரை: பிரதமருக்கு எதிராக திமுகவினர் கருப்புக் கொடி காட்டுவது தங்கள் தவறுகளை மறைப்பதற்குத்தான் என்று மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துளார்.
மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் வெள்ளியன்று மதுரையில் நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
காவிரி விவகாரத்தில் தமிழக மக்களுக்கும், விவசாயிகளுக்கும் நிரந்தர தீர்வு ஏற்படும் வகையில் நடவடிக்கை தேவை.
தலித் மக்களுக்காகவும், ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து கோரியும் சோனியா காந்தி, ராகுல் காந்தி, மற்றும் மல்லிகார்ஜூன கார்கே ஆகியோர் போராட்டம் நடத்தியதை, காவிரி மேலாண்மை வாரியத்திற்காக நடந்த போராட்டம் என்று முரசொலி பத்திரிகையில் தவறாக செய்தி வெளியிட்டு திமுக தொண்டர்களை ஏமாற்றுகிறது.
தமிழகத்தின் வீழ்ச்சிக்கு காரணமாக இருந்தவர்கள் திமுகவினர். பிரதமருக்கு எதிராக திமுகவினர் மற்றும் காங்கிரசார் கருப்புக் கொடி காட்டுவது தங்கள் தவறுகளை மறைப்பதற்குத்தான்
ஐ.பி.எல் எதிர்ப்பு போராட்டம், பிரதமருக்கு கருப்பு கொடி காட்டும் போராட்டம் ஆகியவற்றின் போது சில தலைவர்கள் பேசிய வார்த்தைகள் தமிழர்களுக்கே அவமானத்தை ஏற்படுத்தக்கூடிய வார்த்தைகள். தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய திட்டங்களுக்கு எதிராகவும் இத்தகைய போராட்டங்கள் நடத்தப்பட்டது.
தற்போது எல்லா இயக்கங்களிலும் பயங்கரவாதிகள் ஊடுருவி இருக்கிறார்கள். அவர்களின் பெருமுயற்சியின் விளைவுதான் ஜல்லிக்கட்டு போராட்டம். இதை நான் எப்போது வேண்டுமானாலும் சொல்லுவேன். இந்த பயங்கரவாதிகள் தமிழ்நாட்டை சுடுகாடாக மாற்ற முயற்சிக்கிறார்கள்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.