கல்லூரி மாணவிகளைத் தவறாக வழி நடத்தும் வகையில் பேசிய பேராசிரியை விவகாரம் தொடர்பாக உயர் நிலை விசாரணைக்கு தமிழக ஆளுநரும் பல்கலைக்கழக வேந்தருமான பன்வாரிலால் புரோஹித் உத்தரவிட்டுள்ளார்.
அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி கணிதப் பேராசிரியை நிர்மலா தேவி, மாணவிகளுக்கு மதிப்பெண் மற்றும் பண ஆசை காட்டி அவர்களைத் தவறாக வழிநடத்தும் வகையில் பேசியிருக்கும் ஆடியோ, சமூக ஊடகங்களிலும் தொலைக்காட்சிகளிலும் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது அக்கல்லூரி மாணவிகளிடையேயும், பெற்றோரிடையேயும் இந்தச் சம்பவம் பெரும் அச்சத்தை உருவாக்கியது.
இந்த விவகாரம் குறித்து முழுமையான விசாரணையை மேற்கொள்ளும் வகையில், உயர்நிலை விசாரணைக்கு தமிழக ஆளுநர் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக ஆளுநர் அலுவலகம் திங்கள்கிழமை வெளியிட்ட செய்தி:
இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் தண்டனையிலிருந்து தப்பிவிடாத வகையில், உடனடியாக விசாரணை நடத்துவது மிக அவசியம். எனவே, மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் அளித்துள்ள அறிக்கையின் அடிப்படையில், ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஆர். சந்தானம் தலைமையில் உயர்நிலை விசாரணைக்கு உத்தரவிடப்படுகிறது. ஒருங்கிணைந்த ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியராகவும், அரசின் தலைமைச் செயலர் அந்தஸ்திலான பல்வேறு பதவிகளையும் வகித்தவர் சந்தானம். அவர் ஓய்வுபெற்ற பின்னர் மத்திய நிர்வாகத் தீர்ப்பாயத்தின் உறுப்பினராகவும் பதவி வகித்தவர்.