பவானிசாகர் அணையிலிருந்து கீழ்பவானி கால்வாய் பாசனத்துக்கு 7 டிஎம்சி தண்ணீர் திறந்துவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் கீழ்பவானி விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் தாக்கல் செய்த மனுவில், ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையிலிருந்து கீழ் பவானி கால்வாய் பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடுவது வழக்கம். இதன் மூலம் ஆண்டுக்கு 2 லட்சத்து 7 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும்.
ஒற்றை இலக்க மற்றும் இரட்டை இலக்கத் தேதிகளில் தனித்தனி கால்வாய்களில் முறைப் பாசனம் நடக்கிறது. ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒற்றை இலக்கத் தேதிகளில் தண்ணீர் திறந்துவிட வேண்டிய கால்வாய்களில் தண்ணீர் திறப்பதில்லை. இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் லாரிகள் மூலம் தண்ணீர் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். எனவே, பவானிசாகர் அணையில் இருந்து 7 டிஎம்சி தண்ணீரை கீழ்பவானி கால்வாய் பாசனத்துக்காக திறந்துவிட தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தனர்.
இம்மனு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் நீதிபதி அப்துல் குத்தூஸ் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த மனு குறித்து தமிழக அரசு வரும் 23- ஆம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தனர்.