வெப்பச் சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக கடுமையான வெயில் நிலவி வருகிறது. குறிப்பாக வட தமிழகத்தில் வெயில் வாட்டி வதைக்கிறது. இந்நிலையில் மாலத்தீவு மற்றும் லட்சத் தீவு பகுதிகளில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுநிலை உருவாகி அதன் காரணமாக கடந்த சில நாள்களாக தென்தமிழகத்தில் மழை பெய்து வந்தது. இக்காற்றழுத்தத் தாழ்வு நிலை தென்கிழக்கு அரபிக் கடல் பகுதிக்கு நகர்ந்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதன் காரணமாக தென் தமிழகத்தில் ஒருசில இடங்களில் மட்டுமே மழை பெய்யும். குறிப்பாக மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதி மற்றும் அதையொட்டியுள்ள பகுதிகளில் லேசான மழை பெய்யும். ஒருசில இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கும் வாய்ப்பு உண்டு. வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னையைப் பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்சம் 28 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மயிலாடி, மேட்டுப்பாளையம், திருச்சி விமான நிலையத்தில் 30 மி.மீ. மழை பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.