கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் அருகே அரசுப் பள்ளிக்கு தேவையான உபகரணங்களை கிராம மக்கள் சீர்வரிசையாக வழங்கினர்.
காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள நந்திமங்கலம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த கிராமம் கடலூர் மாவட்டத்தில் மிகவும் பின்தங்கிய பகுதியாகும். இந்தப் பள்ளி ஆசிரியர்களின் முயற்சியால் மாணவர்கள் மாவட்ட அளவிலான பொது அறிவு, ஆங்கிலப் பேச்சு, ஓவியப் போட்டிகளில் முதலிடம் பிடித்தனர். இதனால் மகிழ்ச்சியடைந்த மாணவர்களின் பெற்றோர், கிராம மக்கள் தனியார் பள்ளிகள் போல இந்தப் பள்ளிக்கு தேவையான வசதிகள் செய்துதர முயற்சி மேற்கொண்டனர்.
இதற்காக, இந்தப் பள்ளியில் படித்து அரசு, தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் முன்னாள் மாணவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடமிருந்தும் ரூ.2 லட்சம் வரை நிதி உதவி பெற்று, பள்ளிக்குத் தேவையான கணினி, மேஜைகள், பீரோக்கள், மின் விசிறிகள், விளையாட்டு உபகரணங்கள், நூல்கள் உள்ளிட்ட பல்வேறு பொருள்களை வாங்கினர்.
இந்தப் பொருள்களை பள்ளிக்கு வழங்கும் நிகழ்வை, 'ஊர் கூடி கல்விச் சீர் வழங்கும்' விழாவாக நடத்த முடிவு செய்தனர். அதன்படி கிராம மக்கள் செவ்வாய்க்கிழமை மேளதாளம் முழங்க, வாண வேடிக்கைகளுடன் இந்தப் பொருள்களை சுமந்து ஊர்வலமாகச் சென்று பள்ளிக்கு வழங்கினர்.
விழாவில், காட்டுமன்னார்கோவில் எம்எல்ஏ நாக.முருகுமாறன், சிதம்பரம் எம்எல்ஏ கே.ஏ.பாண்டியன் ஆகியோர் பங்கேற்று உரையாற்றினர்.