நடிகர் ரஜினிகாந்த் நடித்து திரைக்கு வரவுள்ள 'காலா' திரைப்படத்துக்கு தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் கே.எஸ்.ராஜசேகரன் தாக்கல் செய்த மனுவில், 'கரிகாலன்' என்ற படத்துக்கான தலைப்பை நான் கடந்த 1996-ஆம் ஆண்டு முதல் 2006-ஆம் ஆண்டு வரை முறையாகப் பதிவு செய்து புதுப்பித்து வந்தேன். திடீரென இந்தத் தலைப்பை நடிகர் ரஜினிகாந்த் படத்துக்கு 'காலா' என்ற கரிகாலன் என பெயர் வைத்து தயாரித்து வருகின்றனர். இதுகுறித்து சங்க நிர்வாகிகளிடம் கேட்டதற்கு, 'நான் எனது படத்தின் தலைப்பை புதுப்பிக்காததால் அந்த தலைப்பை வேறு ஒருவருக்கு மாற்றி விட்டதாகக் கூறுகின்றனர். ஒருவேளை அப்படியிருந்தால் அந்த விதிகளை ரத்து செய்ய வேண்டும். மேலும் 'காலா என்ற கரிகாலன்' திரைப்படத்துக்கு நிரந்தரமாகத் தடை விதிக்க வேண்டும் எனக் கோரியிருந்தார்.இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், மனு தொடர்பாக நடிகர் ரஜினிகாந்த், இயக்குனர் ரஞ்சித் மற்றும் படத் தயாரிப்பு நிறுவனம் பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில் வழக்கு நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த வழக்குத் தொடர்பாக மனுதாரர் போதுமான ஆவணங்களைத் தாக்கல் செய்யவில்லை. எனவே 'காலா' என்ற கரிகாலன் திரைப்படத்துக்கு தடை விதிக்க முடியாது எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.