பவானி தொகுதி சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினர் பி.ஜி.நாராயணன் அதிமுகவிலிருந்து விலகி, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் சேர்ந்தார்.
கடந்த 1980-ஆம் ஆண்டு தொடங்கி மூன்று முறை சட்டப் பேரவை உறுப்பினர், இருமுறை மக்களவை உறுப்பினர், ஒரு முறை மாநிலங்களவை உறுப்பினர், மக்களவை அதிமுக குழுத் தலைவராக பொறுப்பு வகித்தவர் பி.ஜி.நாராயணன். அதிமுகவில் பொதுக்குழு உறுப்பினராக உள்ள இவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்துக்குப் பின்னர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்தார்.
இரு அணிகள் இணைந்த பின்னர் இவருக்கு கட்சியில் முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. கட்சி வளர்ச்சி குறித்த தனது கோரிக்கைகள் புறக்கணிக்கப்பட்டதோடு அவமானப்படுத்தப்பட்டதாக கருத்துத் தெரிவித்த பி.ஜி.நாராயணன், டிடிவி.தினகரன் தலைமையிலான அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இணைந்ததாகத் தெரிவித்தார்.