இடை நிலை ஆசிரியர்கள் போராட்டம் நடத்துவது அரசுக்குத்தான் அவமானம் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இது தொடர்பாக புதன்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழக அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்கள் பாகுபாடின்றி கல்வி வழங்கும் நிலையில், அவர்களுக்கான ஊதியமும் பாகுபாடின்றி வழங்கப்பட வேண்டும். இந்த விஷயத்தில் தமிழக அரசு ஒரு தரப்பு ஆசிரியர்களுக்கு மிகப்பெரிய அநீதியை இழைத்து வருகிறது.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களை அரசும், காவல்துறையும் நடத்தும் விதம் மிகப்பெரிய மனித உரிமை மீறல்.
உண்ணாவிரதம் மேற்கொண்டவர்களில் பலர் மயங்கி விழுந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், இரக்கமில்லாத அரசு இன்னும் அவர்கள் மீது அடக்குமுறைகளை ஏவிக்கொண்டிருக்கிறது.
ஆசிரியர்களைப் போராட்டம் நடத்தும் சூழலுக்கு ஆட்சியாளர்கள் தள்ளியிருப்பது அரசுக்கு அவமானம் ஆகும்.