பல்வேறு பதவிகளுக்கு பணி நியமனம் நடைபெறுவதாக கட்செவி அஞ்சல் மூலம் பரவும் தகவல்களை நம்ப வேண்டாம் என்று வருமான வரித்துறை எச்சரித்துள்ளது.
இது தொடர்பாக புதன்கிழமை வெளியிடப்பட்ட அறிவிப்பு:
சென்னையில், வருமான வரித் துறையில் பல்வேறு பதவிகளுக்கு இணையதளத்தின் மூலம் பணி நியமன விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கலாம் என்று கட்செவி அஞ்சல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பல்வேறு தகவல்கள் பரவி வருகின்றன. சென்னையில் உள்ள வருமானவரித் துறை அலுவலகம் இத்தகைய பணிநியமன நடைமுறை எதையும் மேற்கொள்ளவில்லை.
வருமான வரித் துறையில் உள்ள பதவிகளுக்கான பணி நியமனம் குறித்த அறிவிப்புகள், துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் வெளியிடப்பட்டு, பணியாளர் தேர்வாணையத்தால் மட்டுமே பணி நியமனம் நடைபெறும்.
எனவே, சமூக வலைதளங்களில் பரப்பப்படும் தவறான செய்திகளை நம்பி யாரும் ஏமாற வேண்டாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.