சென்னை: விஸ்வருபம் - 2 திரைப்படம் கண்டிப்பாக வெளிவரும் என்று நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் சென்னை விமான நிலையத்தில் வெள்ளியன்று மாலை செய்தியாளர்களை சந்தித்தார். அவரிடம் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன. அதற்கு அவர் அளித்துள்ள பதில்கள் பின்வருமாறு:
2019-ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் நாங்கள் எந்தக் கட்சியுடன் கூட்டணி வைப்போம் என்று கேட்கிறீர்கள்? நாங்கள் ஊழல் ஒழிப்பு என்பதனை வலியுறுத்தி வருகிறோம். எனவே எங்களுடன் கூட்டணி வைப்பதற்கான கட்சிகளுக்கான வாய்ப்பு குறைவு.
சிலை திருட்டு வழக்குகள் சிபிஐ வசம் மாற்றப்பட்டதில் உள்நோக்கம் இல்லைவென்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியது தொடர்பான கேள்விக்கு, 'லோக் ஆயுக்த சட்டத்தினை நீர்த்து போகச் செய்யும் விதத்தில் நிறைவேற்றயதில் இருந்தே அவர்களது நோக்கம் தெரிகிறது. எனவே இதில் கண்டிப்பாக உள்நோக்கம் இருக்கிறது என்று தெரிவித்தார்.
உள்ளாட்சித் தேர்தலில் என்ன விதமான நிலைப்பாடு எடுக்கப் போகிறோம் என்பதை நான் தனியாக முடிவெடுக்க இயலாது. நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்.
விஸ்வருபம் - 2 திரைப்பட வெளியீட்டிற்கு தடை கோரி வழக்கு தொடுக்கப்பட்டிருப்பது தொடர்பான கேள்விக்கு அவர், 'விஸ்வருபம் - 2 திரைப்படம் கண்டிப்பாக வெளிவரும்; படத்திற்கு என்ன மாதிரியான தடைகள் வெளிவரும் என்று நாங்கள் யூகித்த ஒன்றுதான் நடந்திருக்கிறது. அவர்கள் நிறைய பேசிக் கொண்டே இருக்கிறாரகள். ஆனால் நாங்கள் நீதிமன்றத்தினை மதிப்பவர்கள். வழக்கு நடக்கும் பொழுது பேசக் கூடாது. ஆனால் படம் கண்டிப்பாக வெளிவரும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.