சென்னை: உயிரிழந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு இறுதி அஞ்சலி செலுத்திய பிரதமர் நரேந்திர மோடி அது குறித்து தமிழில் டிவீட் செய்துள்ளார்.
முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதி வயோதிகம் காரணமாக உடல் நலக் குறைவு ஏற்பட்டு நேற்று மாலை மரணம் அடைந்தார்.
அவரது உடல் சென்னை ராஜாஜி அரங்கில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. புது தில்லியில் இருந்து பிரதமர் மோடி விமானம் மூலம் சென்னை வந்தார்.
ராஜாஜி அரங்கில் வைக்கப்பட்டிருந்த கருணாநிதியின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பிரதமர் மோடி, அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார்.
கலைஞர் கருணாநிதி உடலுக்கு அஞ்சலி செலுத்தியது குறித்து மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் தமிழில் பதிவிட்டுள்ளார்.
அதில், தன்னிகரற்ற தலைவரும், பழுத்த நிர்வாகியும், மக்கள் நலனுக்காகவும் சமூக நீதிக்காகவும் தன் வாழ்நாளை அர்ப்பணித்த தலைவருக்கு சென்னையில் அஞ்சலி செலுத்தினேன். கலைஞர் கருணாநிதியால் தங்கள் வாழ்க்கையில் மாற்றம் கண்ட கோடானு கோடி மக்களின் எண்ணங்களிலும் இதயத்திலும் அவர் வாழ்வார் என்று பதிவிட்டுள்ளார்.
ஆம், அவர் மறைந்தாலும், அவரால் பயனுற்ற கோடானு கோடி மக்களின் எண்ணங்களிலும், இதயத்திலும் அவர் நீடூழி வாழ்ந்து கொண்டிருப்பார் என்ற உண்மையை பிரதமர் மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருப்பதை வரவேற்றே ஆக வேண்டும்.