சென்னை: திமுக தலைவர் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்திய பிறகு விரைவாக கலைந்து செல்லுங்கள் என்று தொண்டர்களுக்கு ஸ்டாலின் உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார்.
உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த திமுக தலைவர் கருணாநிதி ஆழ்வார்ப்பேட்டை காவேரி மருத்துவமனையில் செவ்வாய் மாலை 06.10 மணியளவில் மரணமடைந்தார். தற்பொழுது சென்னை ராஜாஜி அரங்கில் கருணாநிதியின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டுள்ளது. பல்வேறு அரசியல் கட்சிப் பிரமுகர்கள், நடிகர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரும் அவரது பூத உடலுக்கு தொடர்ந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர் அத்துடன் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் ராஜாஜி அரங்கில் குவிந்து தங்களது தலைவருக்கு இறுதி அஞ்சலிகளை செலுத்தி வருகின்றனர் அதேசமயம் கூட்ட நெரிசலில் சிக்கி இரண்டு பேர் மரணமடைந்துள்ளார். அத்துடன் எட்டு பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தகவலும் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் திமுக தலைவர் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்திய பிறகு விரைவாக கலைந்து செல்லுங்கள் என்று தொண்டர்களுக்கு ஸ்டாலின் உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தொண்டர்கள் நடுவே உரையாற்றிய ஸ்டாலின் கூறியதாவது:
நமது தலைவரின் உடலை அடக்கம் செய்வதற்காக மெரினா கடற்கரையில் இடம் கேட்டு முதல்வரிடம் கோரிக்கை வைத்திருந்தோம். ஆனால் அது நிறைவேற்றப்படவில்லை.
தனது வாழ்நாளில் இட ஒதுக்கீடு கேட்டு போராடியவர், இறப்பிற்குப் பிறகும் இட ஒதுக்கீட்டிலும் வெற்றி பெற்றுள்ளார்.
இறுதி அஞ்சலி செலுத்த அதிக அளவில் தொண்டர்கள் கூடியுள்ளதால் ஒரு சிலர் படுகாயம் அடைந்துள்ளனர்.
இறுதி அஞ்சலி செலுத்தும் பொருட்டு ராஜாஜி அரங்கின் சுவற்றை ஏறிக் குதிக்க வேண்டாம் என்று தொண்டர்களிடம் வேண்டுகோள் வைக்கிறேன்.
இறுதி அஞ்சலி செலுத்திய பிறகு உடனே கலைந்து செல்லுங்கள்.அப்போதுதான் குறிப்பிட்ட நேரத்தில் இறுதி ஊர்வலத்தை துவக்க இயலும்.
ஒரு சகோதரனாக இதைநான் உங்களிடம் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.