சென்னை: திருச்சியில் உள்ள ஸ்ரீரங்கம் பெருமாள் கோயிலில் உள்ள நம்பெருமாள் உற்சவர் சிலை மாற்றப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கை விசாரிக்குமாறு சிலை கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
ஆகம விதிப்படி ஆய்வு நடத்த உத்தரவிடலாம் என்றும் ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் சிலைகளை பார்வையிடலாம் என்றும் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நம்பெருமாள் உற்சவர் சிலை மாற்றப்பட்டதாக 2017ஆம் ஆண்டு அக்டோபரில் கொடுக்கப்பட்ட புகார் குறித்து விசாரணை நடத்தி 6 வாரத்துக்குள் அறிக்கை தாக்கல் செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோயிலில் உள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த சிலைகள் காணாமல் போனதாகக் கொடுக்கப்பட்ட புகாரில் முகாந்திரமில்லை என்று கூறி காவல்துறை விசாரணைக்கு ஏற்க மறுத்த வழக்கு சிலை கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது.