திமுக தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான மு.கருணாநிதி உடலை அடக்கம் செய்வதற்காக 75 கிலோ தேக்கு மரங்களைப் பயன்படுத்தி 12 மணி நேரத்தில் சந்தனப் பேழை செய்யப்பட்டுள்ளது.
திமுக தலைவர் மு.கருணாநிதி உடல் நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை மாலை காலமானார்.
இதையடுத்து அவரது உடல் அரசியல் கட்சித் தலைவர்கள், பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டு பின்னர் மெரீனா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடத்தின் பின்புறத்தில் சந்தனப் பேழையில் வைக்கப்பட்டு புதன்கிழமை மாலை அடக்கம் செய்யப்பட்டது.
3 மாதிரி வடிவங்கள்: இதுகுறித்து சந்தனப் பேழையை உருவாக்கிய பிளையிங் ஸ்குவார்டு நிறுவனத்தின் உரிமையாளர் பி.ஆர்.எம்.எம். சாந்தகுமார் கூறியது: கடந்த செவ்வாய்க்கிழமை மாலை 6.30 மணி அளவில் திமுக தலைவர் கருணாநிதி இறந்து விட்டார் என்றும், அவருக்கு சந்தனப் பேழை செய்யுமாறு தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, அவரது குடும்ப உறுப்பினர்களிடம் 3 வடிவங்களின் மாதிரிகள் காண்பிக்கப்பட்டன. அதில், கருணாநிதியை அடக்கம் செய்த சந்தனப் பேழையை குடும்ப உறுப்பினர்கள் தேர்வு செய்தனர். அதைத் தொடர்ந்து 10 மணி அளவில் சந்தனப் பேழை உருவாக்கும் பணி உடனடியாகத் தொடங்கப்பட்டது. இப்பணியில் 8 ஊழியர்கள் ஈடுபட்டனர்.
12 மணி நேரத்தில் வடிவமைப்பு: 6 அடி நீளத்தில் 2.5 அடி அகலத்தில் 75 கிலோ தேக்கு மரங்களைப் பயன்படுத்தி இந்த சந்தனப் பேழை வடிவமைக்கப்பட்டு சந்தனப் பூச்சு பூசப்பட்டது. இதன் உள்பகுதி முழுவதும் உயர்ரக துணியால் அலங்கரிக்கப்பட்டுள்ளதுடன், 3 தலையணைகளும் வைக்கப்பட்டன.
பேழையின் ஒரு புறத்தில் ஓய்வெடுக்காமல் உழைத்தவன் இதோ ஓய்வு கொண்டிருக்கிறான்' என்றும் மறுபுறத்தில் கலைஞர் மு.கருணாநிதி, திமுக தலைவர், 3-6-1924-7.8.2018' என்ற வாசகங்களும் பதிக்கப்பட்டுள்ளன.
மேலும், பேழையின் இருபுறமும் 6 தங்க முலாம் பூசிய கைப்பிடிகளும், நட்சத்திரங்களும் அமைக்கப்பட்டுள்ளன. இப்பணிகள் அனைத்தும் முடிக்கப்பட்டு புதன்கிழமை காலை 10 மணி அளவில் பேழை அமைக்கும் பணி நிறைவடைந்தது என்றார்.