புது தில்லி: 2030ம் ஆண்டில் 20 சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோலை எரிபொருளாகப் பயன்படுத்த மத்திய அரசு இலக்கு நிர்ணயித்திருப்பதாக பிரதமர் மோடி கூறியுள்ளார்.
உலக உயிரி தினத்தை முன்னிட்டு தில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, உயிர் எரிபொருளானது, கச்சா எண்ணெய் இறக்குமதியை பெரிய அளவில் ஒரு நாடு சார்ந்திருப்பதைக் குறைக்கும். இதனால் சுற்றுச்சூழலுக்கு நன்மை பயப்பதோடு, விவசாயிகளின் வருவாயும் கூடும். வேலை வாய்ப்பும் அதிகரிக்கும்.
2002ம் ஆண்டு தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியின் போது பெட்ரோலில் எத்தனால் கலக்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் அடுத்து வந்த அரசுகள் அதனை பின்பற்றவில்லை.
மீண்டும் 2014ம் ஆண்டு தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக்கு வந்ததும், இந்த திட்டத்தை துவக்கியுள்ளது. தொடர் முயற்சியின் பயனாக 2014ல் 38 கோடி லிட்டர் எத்தனால் கலந்த பெட்ரோல் தயாரிக்கப்பட்டது. இது 2018ல் 141 கோடி லிட்டராகவும் அதிகரித்தது. 2022ம் ஆண்டுக்குள் பெட்ரோலில் 10 சதவீத எத்தனால் கலந்து எரிபொருளாகப் பயன்படுத்தவும், இதனை 2030ல் 20% ஆக உயர்த்தவும் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.