வேணு சீனிவாசன் மீதான வழக்கை திரும்பப்பெற வேண்டும்: வைகோ

வேணு சீனிவாசன் மீதான வழக்கை திரும்பப்பெற வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
வேணு சீனிவாசன் மீதான வழக்கை திரும்பப்பெற வேண்டும்: வைகோ

வேணு சீனிவாசன் மீதான வழக்கை திரும்பப்பெற வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில்,
தொழிலதிபர் டி.வி.எஸ். குழுமத்தின் வேணு சீனிவாசன் மீது திருவரங்கம் கோவில் குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு இருப்பதாகவும், நீதிமன்றத்தில் அவர் முன்ஜாமின் கேட்டிருப்பதாகவும் செய்தி அறிந்து திடுக்கிட்டு, அதிர்ச்சி அடைந்தேன்.

இந்தியாவிலேயே புகழ்பெற்ற தொழில் நிறுவனமான டி.வி.எஸ். குழுமம், இலட்சக்கணக்கான மக்களுக்கு வாழ்வு அளித்துள்ளது. மதிப்பிற்குரிய வேணு சீனிவாசன் தமிழ்நாட்டில் நான்காயிரம் கிராமங்களில் முப்பது இலட்சம் மக்களுக்கு புதுவாழ்வு தந்துள்ளார். அண்டை மாநிலங்களில் ஆயிரம் கிராமங்களிலும் அனைத்து சமூக மக்களுக்கும் பயனளிக்கும் விதத்தில் அங்குள்ள பெண்களுக்கு கூடை முடைதல், பாய் பின்னுதல், நெசவுநெய்தல், இயற்கை உரம் தயாரித்தல் போன்ற தொழில்கள் சுய வேலைகளுக்கு நிதி உதவி தந்து, ஒரு இலட்சத்து 68 ஆயிரம் மகளிர் வருடத்திற்கு 680 கோடி ரூபாய்
வருமானம் பெற வழிவகுத்தார் என்ற செய்தியை கிராமங்களில் உள்ள மக்கள் மூலம் நான் அறிந்தபோது, ஆச்சரியத்தின் உச்சிக்கே சென்று மனம் நெகிழ்ந்தேன்.

இதுகுறித்து அந்தப் பெருந்தகை எந்தவிதத்திலும் தன்னை விளம்பரப்படுத்திக் கொண்டது இல்லை. நான் அவரிடம் நெருங்கிப் பழகியது இல்லை. இதனை அறிந்ததனால் ஓராண்டு முன்னர் அவரைச் சந்தித்து, அவர் செய்யும் மனிதாபிமான தொண்டுகளைக் கேட்டு அறிந்தேன். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் உள்ள 104 கண்மாய்களில் தன் சொந்தச் செலவில் தூர் வார ஏற்பாடு செய்தவர். சென்ற வருடத்தில் மட்டும் இவரது முயற்சியால் 733 கோடி லிட்டர் மண் தூர் வாரப்பட்டுள்ளது.

திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியின்போது முதல்வர் கருணாநிதியும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் முதல்வர் ஜெயலலிதாவும் தமிழகத்தின் திருக்கோயில்களில் திருப்பணிகளைச் செய்வதற்குரிய பொறுப்புக்களை வேணு சீனிவாசனிடம் ஒப்படைத்தனர். அண்ணா திமுக ஆட்சியில் 1995 ஆம் ஆண்டு தொடங்கி, திமுக கருணாநிதி ஆட்சியில் நிறைவுசெய்யப்பட்ட நவ திருப்பதி கோவில்களின் திருப்பணியும், குடமுழுக்காட்டும் வேணு சீனிவாசன்  ஏற்பாட்டில் நடத்தப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டத்திலிருந்து நெல்லை மாவட்டம் வரையிலும் தாமிரபரணி நதிக்கரையில் உள்ள நவ திருப்பதி என்று அழைக்கப்படும் ஒன்பது வைணவக் கோவில்களுக்கும் வேணு சீனிவாசன் ஏற்பாட்டில் திருப்பணியும் குடமுழுக்கு விழாவும் நடத்தப்பட்டது. அனைத்துச் சமூக மக்களும் ஒன்றுபட்டு இத்திருப்பணியில் ஈடுபட வேண்டும் என்ற நோக்கத்தில் ஊர்கூடி தேர் இழுக்க வேண்டும் என்ற முதுமொழியைக் கருத்தில் கொண்டு, ஆங்காங்கு உள்ள அனைத்துத் தரப்பினரிடமும் அவர்களால் இயன்ற அளவு நிதியைப் பெற்று, தானே இருபது கோடி ரூபாய்க்கு மேல் செலவழித்து இந்தத் திருப்பணியில் ஈடுபட்டார்.

திருப்புளியங்குடி எனும் வைணவத் தலத்தில் குடமுழுகாட்டு விழாவினை பெரியவர் சங்கரலிங்க நாடார் தலைமையில் நடத்தியபோது, அவர் எங்கள் சமுதாயத்துக்கே கொடுக்கப்பட்ட மரியாதை என்று அந்த விழாவில் கண்ணீர் சிந்தினார். ஒவ்வொரு கோவிலிலும் தமிழ்நாட்டில் உள்ள முக்கியமானவர்களை குடமுழுக்கு விழாவுக்குத் தலைமையேற்கச் செய்தார். கபாலீஸ்வரர் கோவிலில் திருப்பணிக்குழுத் தலைவராக இவர் பொறுப்பேற்று, 2004 ஆம் ஆண்டு குடமுழுக்காட்டு விழா நடைபெற்றது. இந்த ஆலயத்தில் உள்ள கபாலீஸ்வரர் மீது கொண்ட பக்தியால் வேணு சீனிவாசன் இதற்கு 70 இலட்ச ரூபாய் தன் சொந்தப் பணத்தை அறக்கட்டளையிலிருந்து செலவழித்திருக்கிறார்.

2015 ஆம் ஆண்டு வேணு சீனிவாசன் திருவரங்கம் கோவில் அறங்காவலர் குழுத் தலைவராக நியமிக்கப்பட்டார். திருமால் பக்தரான வேணு சீனிவாசன் தன்னுடைய சொந்த அறக்கட்டளையிலிருந்தே திருப்பணிக்கு 25 கோடி ரூபாய் செலவழித்திருக்கிறார். தமிழகத்திலும், கர்நாடகா, கேரளத்திலும் உள்ள நூறு ஆலயங்களுக்கு தனது சொந்த அறக்கட்டளை பணத்திலிருந்து செலவழித்து திருப்பணி செய்திருக்கிறார். திருவரங்கம் கோவிலில் முறைகேடு நடந்ததாகச் சொல்லப்படும் குற்றச்சாட்டில் உயர்திரு வேணு சீனிவாசன் அவர்களையும் சேர்த்து வழக்குப் பதிவு செய்திருப்பது மிகப்பெரிய அநீதியாகும்.

நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் ஏர்வாடி பகுதியில் உள்ள இசுலாமியப் பெருமக்களும், சாயர்புரம் பகுதியில் உள்ள கிறித்தவப் பெருமக்களும் பண்பாளர் வேணு சீனிவாசனை உச்சிமேல் வைத்து மெச்சுவதை நான் நன்கு அறிவேன். அனைத்துச் சமயங்கள், சாதிகள் சார்ந்த மக்களை ஒருங்கிணைத்தே
அந்தந்த ஊர்களில் மகளிர் சுயஉதவி நிதி, கண்மாய்கள் சீரமைப்பு ஆகியவற்றை தனது சொந்த அறக்கட்டளை நிதியிலிருந்து செய்து வரும் கொடைச் செயலை எவ்விதத்திலும் அவர் விளம்பரப்படுத்திக்கொள்வது இல்லை என்பதை நான் நன்கு அறிவேன்.

அநீதி யாருக்கு இழைக்கப்பட்டாலும், கொடுமை எங்கு நடந்தாலும் அதனை எதிர்த்துப் பொங்கி எழவேண்டும் என்றான் கவிஞன் பாரதி. தமிழ் மொழியின்பால் பற்றும், தமிழ் இலக்கியங்கள்பால் உயர்ந்த ஈர்ப்பும் கொண்டுள்ள நெறியாளர் வேணு சீனிவாசன் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கிலிருந்து தமிழக அரசு உடனடியாக அவரை விடுவிக்க வேண்டும். தூய உள்ளமும், கொடைத் திறனும் கொண்டு அறவழியில் நடப்போர் மீது வழக்குத் தொடுப்பதும், குன்றிமணி அளவும் தவறு செய்யாத ஒருவர் மீது அபாண்டமாகப் பழி சுமத்தி, அவரது நற்பெயருக்குக் களங்கம் விளைவிப்பதும் சகிக்க இயலாதது; மன்னிக்க முடியாதது என்பதை உணர்ந்து அக்குற்றச்சாட்டிலிருந்து தமிழக அரசு அவரது பெயரை நீக்கி அறிவிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com