லக்னௌ: உத்தரப்பிரதேசத்தில் இருக்கும் 18 நதிகளில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயியின் அஸ்தியைக் கரைக்கும் முடிவை திடீரென பாஜக நேற்று மாற்றிக்கொண்டது.
அதற்கு பதிலாக நாடு முழுவதும் உள்ள 29 மாநிலங்கள் மற்றும் 7 யூனியன் பிரதேசங்களில் பாய்ந்தோடும் நூற்றுக்கும் மேற்பட்ட நதிகளில் வரும் செவ்வாய்க்கிழமை வாஜ்பாயியின் அஸ்தியைக் கரைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
அந்த வகையில் தமிழகத்துக்குக் கொண்டு வரப்படும் வாஜ்பாயியின் அஸ்தி, பாஜகவின் தலைமையகமாக கமலாலயத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படும். பிறகு சென்னை அடையாறு, ராமேஸ்வரம் மற்றும் கன்னியாகுமரி கடல், மதுரை, ஈரோடு, ஸ்ரீரங்கம் உள்ளிட்ட 6 இடங்களில் கரைக்கப்பட உள்ளதாக தமிழக பாஜக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் உள்ள நதிகளில் அவரது அஸ்தியைக் கரைத்து, அவருக்கு மிகச் சிறப்பான இறுதி மரியாதையை செலுத்துவதே சரியாக இருக்கும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
பல்வேறு மாநிலங்களில் இருக்கும் நதிகளில் ஒரே சமயத்தில் வாஜ்பாயியின் அஸ்தியைக் கரைக்கவும், அதில் அந்தந்த மாநில பாஜக எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள், எம்எல்சிக்கள் பங்கேற்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.