காவிரி கடைமடை வரை தண்ணீர் செல்ல எத்தனை நாள்கள் ஆகும்?

காவிரி கடைமடை வரை தண்ணீர் செல்ல எத்தனை நாள்கள் ஆகும் என்று பொதுப்பணித் துறை விளக்கம் அளித்துள்ளது.

காவிரி கடைமடை வரை தண்ணீர் செல்ல எத்தனை நாள்கள் ஆகும் என்று பொதுப்பணித் துறை விளக்கம் அளித்துள்ளது.
இதுகுறித்து பொதுப்பணித் துறை திங்கள்கிழமை அளித்துள்ள விளக்கம்: மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்காகத் திறக்கப்படும் தண்ணீர், கல்லணைக்கு 3 நாள்களில் வந்தடையும். கல்லணைக்குத் தண்ணீர் வந்தடைந்த பிறகே நாமக்கல், கரூர், திருச்சி மாவட்டங்களில் உள்ள 19 வாய்க்கால்களுக்கும், கல்லணையில் இருந்து பிரியும் காவிரி, வெண்ணாறு, கல்லணை கால்வாய் மூலமாக டெல்டா பகுதிகளுக்கும், கொள்ளிடம் ஆற்றின் மூலம் அணைக்கரைக்கும் பாசனத்துக்காக வழங்கப்படுகிறது.
நாமக்கல், கரூர், திருச்சி மாவட்டங்களில் உள்ள 19 வாய்க்கால்களுக்கும் தண்ணீர் அளிக்கப்படும் போது, நேரடி விவசாயம் பெறும் வாய்க்கால்களுக்கு தண்ணீர் கடைமடைக்கு விரைவாகச் சென்று பாசனப் பகுதிகளுக்கு விரைவாக வழங்கப்படுகிறது. அவற்றில் புதிய கட்டளை மேட்டு வாய்க்கால் 134 கி.மீ. தொலைவும், உய்யகொண்டான் வாய்க்கால் 87 கி.மீ. தொலைவும், புள்ளம்பாடி வாய்க்கால் 90 கி.மீ. தொலைவும் உள்ளன.
புதிய கட்டளை மேட்டுக் கால்வாய், சரளைக்கற்கள் நிறைந்த பகுதியாக அமைந்துள்ளது. அங்கு 107 ஏரிகளுக்கு தண்ணீர் வழங்க வேண்டியுள்ளதால் கடைமடைப் பகுதிக்குச் சென்றடைய 75 நாள்கள் ஆகிறது. அது போன்றே உய்யகொண்டான் வாய்க்கால் மூலம் 36 ஏரிகளுக்கும், புள்ளம்பாடி வாய்க்கால் மூலம் 28 ஏரிகளுக்கும், உய்யகொண்டான் வாய்க்கால் நீட்டிப்பு செய்து நீட்டிப்பு கால்வாயில் தண்ணீர் வழங்கப்படுவதாலும், கடைமடை வரை சென்றடைய முறையே 60 நாள்கள் வரை ஆகிறது.
பல்வேறு பிரிவுகள்: கல்லணைக்குச் சென்றடைந்த பிறகு காவிரி 24 பிரிவுகளாகவும், வெண்ணாறு 17 பிரிவுகளாகவும், கல்லணைக் கால்வாய் 27-ஆக பிரிந்தும் தண்ணீர் வழங்கப்படுகிறது. அவற்றில், காவிரி, வெண்ணாற்றில் நேரடியாக தண்ணீர் பெறப்படும் 8 ஆறுகளும், பாசனம், வடிகால் மூலம் தண்ணீர் பெறப்படும் 28 ஆறுகளும் அடங்கும். ஆறுகளில் பாசனம் செய்யப்பட்டு வடிய வைக்கப்படும் தண்ணீரைக் கொண்டு பாசனம் செய்யப்படும் 5 வடிகால்கள் உள்ளன. அவற்றில் நேரடியாக தண்ணீர் வழங்கப்படும் 8 ஆறுகளிலும், பாசனம், வடிகால் மூலம் தண்ணீர் அளிக்கப்படும் 28 ஆறுகளிலும் தண்ணீர் விரைவாக கடைமடை பகுதிகளுக்கும், பாசனப் பகுதிகளுக்கும் சென்றடைகிறது. எனவே, கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் சென்றடையவில்லை என்பது தவறாகும். கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் விரைவாகச் சென்றடைய உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com