நாமக்கல்: தந்தையின் செல்பி மோகத்தால் நாமக்கல் வாங்கல் காவிரிப் பாலத்தில் இருந்து தவறி ஆற்றில் விழுந்த 4 வயது நாமக்கல் சிறுவனைத் தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
கர்நாடக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கன மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. இதனால் மேட்டூர் அணையில் இருந்து 2 லட்சம் கனஅடி வரை தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
இதன் காரணமாக காவிரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டோடுகிறது. எனவே ஆற்றின் ஓரம் நின்று செல்பி எடுப்பதை மக்கள் தவிர்க்க வேண்டும் என்று அமைச்சர் உதயகுமார், மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் என ஏற்கனவே எச்சரித்துள்ளனர்.
இந்நிலையில் தந்தையின் செல்பி மோகத்தால் நாமக்கல் வாங்கல் காவிரிப் பாலத்தில் இருந்து தவறி ஆற்றில் விழுந்த 4 வயது நாமக்கல் சிறுவனைத் தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
நாமக்கல் மாவட்டம் மோகனூரில் வாங்கல் பாலத்தின் நடுப்பகுதியில் இருந்தபடி ஒரு பெற்றோர் காவிரியாற்றில் செல்பி எடுத்தனர். அப்போது அவர்கள் தங்களது 4 வயது ஆண் குழந்தையை பாலத்தின் தூண் ஒன்றில் சாய்த்து அமர வைத்து ஓரு கையால் பிடித்தபடி, தந்தை செல்பி எடுக்க முயன்றனர். அப்பொழுது எதிர்பாராதவிதமாக கையில் வைத்திருந்த 4 வயது குழந்தை ஆற்றில் தவறி விழுந்தது.
இதனைக்கண்ட அங்கிருந்தவர்கள் அலறி துடித்தனர். பின்னர் தகவல் தெரிவிக்கப்பட்டு அங்கு வந்த தீயணைப்புத்துறையினர் குழந்தையை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். கரைபுரண்டோடும் வெள்ளத்தின் காரணமாக தேடும் பணி தாமதமாக நடைபெறுகிறது.
பெற்றோரின் விபரீத செல்பி ஆசையால் 4 வயது குழந்தை ஆற்றில் அடித்து செல்லப்பட்ட சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.