தருமபுரி இளவரசன் மர்ம மரணம் தொடர்பாக விசாரித்த நீதிபதி சிங்காரவேலு, தனது அறிக்கையை தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியை சந்தித்து அளித்தார்.
தருமபுரியை அடுத்த நத்தம் காலனியைச் சேர்ந்த இளவரசன், கடந்த 2013 ஜூலை 4-ஆம் தேதி அரசு கலைக்கல்லூரி பின்புறம் உள்ள ரயில் தண்டவாளத்தில் பிணமாகக் கிடந்தார். இவரது மரணம் குறித்து விசாரணை நடத்த ஓய்வு பெற்ற சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சிங்காரவேலு தலைமையில் கடந்த 2013 ஜூலை 8-ஆம் தேதி ஒரு நபர் விசாரணை ஆணையத்தை தமிழக அரசு அமைத்தது.
சாட்சியங்கள்: இளவரசனின் தந்தை இளங்கோ, தாயார் கிருஷ்ணவேணி, திவ்யாவின் தாயார் தேன்மொழி மற்றும் பாமகவைச் சேர்ந்தவர்கள் என பல்வேறு தரப்பினரிடமும் நீதிபதி சிங்காரவேலு விசாரணை நடத்தினார். இதைத் தவிர மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிப் பிரமுகர்கள் மற்றும் சிலரிடமும் அவர் விசாரணை நடத்தி சாட்சியத்தைப் பதிவு செய்தார்.
2 தொகுப்புகளாக அறிக்கை: தருமபுரி இளவரசன் மர்ம மரணம் தொடர்பாக கடந்த சில மாதங்களாக விசாரணை அறிக்கையை நீதிபதி சிங்காரவேலு தயார் செய்து வந்தார். விசாரணை அறிக்கையை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியிடம் நீதிபதி திங்கள்கிழமை (ஆக. 20) வழங்கினார்.
மரணத்துக்கான காரணிகள், அதைத் தொடர்ந்து நடந்த சம்பவங்கள், இளவரசன், திவ்யா பெற்றோர் தெரிவித்த கருத்துகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை நீதிபதி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். அரசியல் ரீதியான காரணிகள் பற்றியும், எதனால் சம்பவங்கள் நிகழ்ந்தன என்பது குறித்தும் இரண்டு தொகுதிகளாக அறிக்கைகளை நீதிபதி சிங்காரவேலு தாக்கல் செய்துள்ளார். இதுபோன்ற சம்பவங்கள் இனி நடக்காமல் இருப்பதற்கான பரிந்துரைகளையும் நீதிபதி அளித்துள்ளார்.