வைகை அணையிலிருந்து திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மாவட்டங்களின் பாசனத்துக்கு விநாடிக்கு 1,130 கன அடி தண்ணீரை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திங்கள்கிழமை திறந்து வைத்தார்.
வைகை அணைக்கு கடந்த சில நாள்களாக நீர் வரத்து அதிகரித்ததை அடுத்து அணையின் நீர் ஞாயிற்றுக்கிழமை மாலை முழு கொள்ளளவான 69 அடியை எட்டியது. இந்நிலையில், பெரியாறு மற்றும் திருமங்கலம் பாசன பகுதி விவசாயிகள் முதல் போக பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடவேண்டும் என கோரிக்கை விடுத்தனர். அதன்பேரில், பெரியாறு மற்றும் திருமங்கலம் பாசன பகுதிகளுக்கு 120 நாள்களுக்கு விநாடிக்கு 1,130 கன அடி தண்ணீர் திறந்து விட தமிழக அரசு உத்தரவிட்டது.
இதன்படி, திங்கள்கிழமை காலை 9 மணியளவில் வைகை அணையிலிருந்து விநாடிக்கு 1,130 கன அடி தண்ணீரை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திறந்து வைத்தார்.
இதன் மூலம் திண்டுக்கல் மதுரை மற்றும் சிவகங்கை மாவட்டங்களைச் சேர்ந்த 85,563 ஏக்கர் ஒரு போக பாசன நிலங்களும், 19,439 ஏக்கர் திருமங்கலம் பிரதான கால்வாய் பாசன பகுதி என மொத்தம் 1,05,002 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
தண்ணீரை திறந்தவிட்ட பின்பு துணை முதல்வர் கூறியது: வைகை அணையிலிருந்து முதல் போக பாசனத்திற்கு செப்டம்பர் 15ம் தேதி தண்ணீர் திறந்து விடுவது வழக்கம். ஆனால் நிகழாண்டில் பருவமழை முன்கூட்டியே பெய்ததால் தண்ணீர் வரத்து அதிகரித்து அணையின் முழு கொள்ளவை அடைந்ததால் மகிழ்ச்சியாக உள்ளது. இதனால் முன்கூட்டியே தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. விவசாயிகள் சிக்கனமாக பயன்படுத்தி அதிக மகசூலை பெற வேண்டும் என்றார். மேலும் 18 ம் கால்வாய் மற்றும் 58 ம் திட்ட கால்வாய் தண்ணீர் திறப்பது குறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று அரசாணை பெறப்பட்டு தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
நீர் மட்டம்: 71 அடி உயர வைகை அணையில் திங்கள்கிழமை காலை நீர் மட்டம் 65.65 ஆக இருந்தது. விநாடிக்கு 3,325 கன அடி நீர்வரத்து இருந்தது. திண்டுக்கல், மதுரை மற்றும் சிவகங்கை மாவட்ட பாசனத்திற்காக 120 நாள்களுக்கு விநாடிக்கு 1,130 கன அடி தண்ணீர், உபரி நீர் 2,135 கன அடி, மதுரை மற்றும் ஆண்டிபட்டி,சேடபட்டி கூட்டுக்குடிநீர் திட்டத்திற்கு 60 கன அடி என மொத்தம் விநாடிக்கு 3,325 கன அடி தண்ணீர் திங்கள்கிழமை திறந்து விடப்பட்டுள்ளது.