புது தில்லி: மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் அஸ்தி அடங்கிய கலசமானது தமிழக தலைவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
உடல்நலக் குறைவின் காரணமாக தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் பிரதமரும், பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவருமான வாஜ்பாய் கடந்த 16-ந்தேதி மாலை காலமானார். மறுநாள் அவரது உடலானது 21 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யபட்டது
இதனைத் தொடர்ந்து அவரது அஸ்தியினை நாடு முழுவதும் உள்ள ஆறுகளில் கரைப்பது என்று முடிவு செய்யப்பட்டது. இதற்காக பாரதிய ஜனதா கட்சி மாநிலத் தலைவர்கள் ஒவ்வொருவரிடமும் வாஜ்பாயின் அஸ்தி அடங்கிய கலசம் வழங்கப்படுகிறது.
இந்நிலையில் மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் அஸ்தி அடங்கிய கலசமானது தமிழக தலைவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
முன்னதாக இதற்கான நிகழ்வானது தில்லியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, பாரதிய ஜனதா தேசியத் தலைவர் அமித் ஷா, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு, முன்னாள் பிரதமரின் அஸ்தி அடங்கிய கலசங்களை மாநிலத் தலைவர்களிடம் வழங்கினர்.
தமிழகம் சார்பாக அஸ்தியை பெற்று கொண்ட பின்னர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
வாஜ்பாயின் அஸ்தியானது பொதுமக்கள் அஞ்சலி செலுத்தும் வகையில் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைமை அலுலகமான கமலாலயத்தில் இன்றும், நாளையும் வைக்கப்படும். பின்னர் 26-ந்தேதி பவுர்ணமி அன்று அஸ்தி ஆற்றில் கரைக்கப்படும்
இவ்வாறு அவர் தெரிவித்தார்.