தேக்கம்பட்டியில் கோயில் யானைகளுக்கான புத்துணர்வு முகாம் நடத்துவதற்கான முன்னேற்பாட்டுப் பணிகள் தற்போது இறுதி கட்டத்தை எட்டி உள்ளன.
தமிழகம் முழுவதும் உள்ளகோயில் யானைகள் ஆண்டுக்கு ஒரு முறை அரசு சார்பில் புத்துணர்வு முகாமுக்கு அனுப்பப்படுவது வழக்கம். இதன்படி தொடக்கத்தில் நீலகிரி மாவட்டம், முதுமலை தெப்பக்காடு பகுதியில் கோயில் யானைகளுக்கான முகாம் நடைபெற்று வந்தது.
இந்த முகாமுக்கு யானைகளை மலைப்பாதை வழியாகக் கொண்டு செல்வதில் சிரமம் ஏற்பட்டது. மேலும் தெப்பக்காடு பகுதியில் காட்டு யானைகள் தொந்தரவு அதிக அளவில் இருந்ததால் மாற்று ஏற்பாடாக கோவை மாவட்டம், தேக்கம்பட்டி ஊராட்சியில் முகாம் நடத்த அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது. இதன்படி கடந்த 5 ஆண்டுகளாக தேக்கம்பட்டி ஊராட்சிக்கு உள்பட்ட வன பத்ரகாளியம்மன் கோயில் பகுதியில் முகாம் நடத்தப்பட்டது. இந்நிலையில் இந்த ஆண்டு கோயில் யானைகளுக்கான சிறப்பு முகாம் நடத்த வன பத்ரகாளியம்மன் கோயில் பகுதியில் கடந்த 1 மாதமாக நடந்து வந்த முன்னேற்பாட்டுப் பணிகள் முடிவுறும் நிலையில் உள்ளன. யானைகளைக் குளிக்க வைக்கும் தரை தளப் பகுதி பணி முடிந்துள்ளது.
தொடர்ந்து இப்பகுதியில் யானைகள் தங்க தகரக் கொட்டகை அமைக்கும் பணி தற்போது நிறைவடையும் நிலையில் உள்ளது.