வங்கிக் கணக்கு, வங்கி ஏடிஎம் அட்டை விவரங்கள் என எதையுமே வங்கிகள் கேட்காது என்று பல முறை வங்கிகள் தரப்பில் விளக்கம், விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுவிட்டன.
ஆனாலும் சிலர் சமயங்களில் இதுபோன்ற மோசடிகளில் சிக்கிக் கொண்டு பணத்தை இழக்கிறார்கள்.
பொதுமக்கள் என்றால் பரவாயில்லை.. இதுபோன்ற விழிப்புணர்வு அவர்களை சென்றடைய வாய்ப்பில்லை என்று சொல்லிக் கொள்ளலாம். ஆனால், அரியலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் இதுபோன்ற மோசடி கும்பலால் ஏமாற்றப்பட்டுள்ளார். அவரை ஏமாற்றி அவரது வங்கிக் கணக்கில் இருந்து ரூ.78 ஆயிரம் பணம் எடுக்கப்பட்டுள்ளது.
அரியலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரான ஆ. புகழேந்தி கடந்த 6 ஆம் தேதி இரும்புலிக்குறிச்சி மேல்நிலைப்பள்ளிக்கு ஆய்வுக்குச் சென்றபோது அவரை செல்லிடபேசியில் தொடர்புக் கொண்ட மர்ம நபர் மும்பையில் இருந்து பேசுவதாகவும், உங்களது ஏடிஎம் கார்டில் சிப் பொருத்த வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
அதற்காக, ஏடிஎம் கார்டு எண், அதன் ரகசிய எண் என அனைத்து தகவல்களையும் அந்த மர்ம நபருக்கு புகழேந்தி கொடுத்துள்ளார். சிறிது நேரத்தில் அவரது வங்கிக் கணக்கில் இருந்து ரூ.78 ஆயிரம் பணம் எடுக்கப்பட்டுவிட்டதாக செல்போனுக்கு குறுந்தகவல் வந்துள்ளது.
இதைப் பார்த்த புகழேந்தி அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் அளித்த புகாரின் பேரில் அரியலூர் போலீஸார் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
மோசடிக் கும்பலிடம் மாவட்ட கல்வி முதன்மை அதிகாரியே ஏமாந்திருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.