ஸ்டெர்லைட் ஆலைக் கழிவுகளை வரும் ஜன. 7 ஆம் தேதிக்குள் அகற்றி, அதுகுறித்த அறிக்கையை தாக்கல் செய்ய தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டது.
இதுதொடர்பாக தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் காந்திமதி நாதன் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் இவ்வாறு உத்தரவிட்டுள்ளது. அவரது மனு:
தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டை உப்பாற்று ஓடைப் பாலத்தின் கரைப் பகுதியில் ஸ்டெர்லைட் நிறுவனம், அதன் ரசாயனக் கழிவுகளை கொட்டி வைத்துள்ளது. இதனால் சுற்றுச்சூழல் பாதிப்படைந்து வருகிறது. மழைக் காலத்தில் மழை நீர் ஓடைக்குச் செல்லாமல் ஊருக்குள் புகுந்து பெரும் சேதத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனால் அப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் ஸ்டெர்லைட் நிறுவனத்திடம் பல முறை புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. இந்நிலையில், கடந்த 2016ஆம் ஆண்டு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்து, ஆலைக் கழிவுகளை அகற்ற உத்தரவு பெற்றேன்.
ஆனால், மாவட்ட நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுகுறித்து நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து, உடனடியாக கழிவுகளை அகற்றவேண்டும் என்ற உத்தரவையும் பெற்றேன்.
இருப்பினும் கழிவுகள் அகற்றப்படாமல் அப்படியே உள்ளன.
எனவே, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுத்து, உடனடியாக உப்பாற்றில் உள்ள கழிவுகளை அகற்ற உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் கே.கே. சசிதரன், ஜி.ஆர். சுவாமிநாதன் அமர்வு, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ஸ்டெர்லைட் ஆலைக் கழிவுகளை அகற்றி, வரும் ஜன. 7 ஆம் தேதிக்குள் உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.