சிலை கடத்தல் விவகாரம் தொடர்பாக தமிழக அரசு தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் வியாழக்கிழமை (டிசம்பர் 13) நடைபெறுகிறது.
சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரியாக ஓய்வு பெற்ற ஐஜி பொன் மாணிக்கவேலை நியமித்து சென்னை உயர்நீதிமன்றம் கடந்த மாதம் 30-ஆம் தேதி பிறப்பித்த உத்தரவுக்கு எதிராகவும், சிலை கடத்தல் வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு மாற்றி தமிழக அரசு பிறப்பித்த அரசாணை ரத்து செய்யப்பட்டதற்கு எதிராகவும் தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் கடந்த 4-ஆம் தேதி மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மேல்முறையீட்டு மனு, உச்சநீதிமன்ற நீதிபதிகள் அசோக் பூஷண், நாகேஸ்வர ராவ் ஆகியோர் அடங்கிய அமர்வில் வியாழக்கிழமை 13-ஆவது வழக்காக விசாரணைக்கு வரவுள்ளது.