ஊர்க்காவல் படையினர் போராட்டத்தில் ஈடுபடலாம் என்கிற தகவலையடுத்து மெரினாவில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகம் முழுவதும் ஊர்க்காவல் படையில் சுமார் 16 ஆயிரம் பேர் உள்ளனர். சென்னையில் ஊர்க்காவல் படையில் சுமார் 1500 பேர் உள்ளனர். இந்த நிலையில் தெலங்கானா தேர்தல் பணிக்குச் சென்ற வீரர்களுக்கு ஊக்கத் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும்; மாதம் முழுவதும் பணி வழங்க வேண்டும்; அடையாள அட்டை வழங்க வேண்டும்; சம்பளத்தை உயர்த்த வேண்டும்; பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஊர்க்காவல் படையினர் சென்னை எழும்பூரில் திடீரென சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து சென்னை பெருநகர காவல்துறையின் கிழக்கு மண்டல இணையர் டி.எஸ்.அன்பு, ஊர்க்காவல் படை அதிகாரி மஞ்சித்சிங் ஆகியோர் ஊர்க்காவல் படை வீரர்களிடம் பல கட்டங்களாக பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையில், ஊர்க்காவல்படையினரின் கோரிக்கைகளை நிறைவேற்ற அரசிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உத்தரவாதம் அளித்தனர். இதன் பின்னரே, ஊர்க்காவல் படையினர் போராட்டத்தை கைவிட்டனர்.
இந்நிலையில் ஊர்க்காவல் படையினர் தலைமை செயலகத்தை முற்றுகையிட்டு இன்று மீண்டும் போராட்டம் நடத்தலாம் எனத் தகவல் வெளியாகியது. இதையடுத்து முன்னெச்சரிக்கையாக சென்னை மெரினா கடற்கரை பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.