மேக்கேதாட்டுவில் அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து புதுச்சேரி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கர்நாடகத்தில் காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டு என்ற இடத்தில் அணையைக் கட்ட கர்நாடக அரசின் வரைவு அறிக்கைக்கு மத்திய அரசு அனுமதி அளித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழக சட்டப்பேரவையில் கடந்த வாரம் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதேபோல, புதுவையிலும் சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்தை நடத்த வேண்டும் என புதுவையில் உள்ள எதிர்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தன. அதன் அடிப்படையில் பேரவையின் சிறப்புக்கூட்டம் இன்று நடைபெறும் என பேரவைச் செயலர் வின்சென்ட் ராயர் அறிவித்தார்.
அதன்படி புதுவை சட்டப்பேரவையின் சிறப்புக்கூட்டம் இன்று காலை நடைபெற்றது. அதில், மேக்கேதாட்டுவில் அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.