குட்கா ஊழல் வழக்கில் முன்னாள் அமைச்சர் பி.வி. ரமணா சென்னை சிபிஐ அலுவலகத்தில் இன்று ஆஜராகியுள்ளார்.
கடந்த 2016-இல் வருமானவரித் துறையினர் சென்னை செங்குன்றத்தில் உள்ள குட்கா கிடங்கியில் சோதனை நடத்தினர். அங்கு கிடைத்த ரகசிய டைரியில் சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், சென்னை காவல்துறை ஆணையராக அப்போது இருந்த இப்போதைய டிஜிபி தே.க.ராஜேந்திரன், ஓய்வு பெற்ற டிஜிபி எஸ்.ஜார்ஜ் உள்ளிட்ட பலர் லஞ்சம் வாங்குவதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
இது தொடர்பாக அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி தே.க.ராஜேந்திரன், ஓய்வு பெற்ற டிஜிபி ஜார்ஜ் ஆகியோர் வீடுகள் உள்பட 35 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் கடந்த செப்டம்பர் 5-ஆம் தேதி சோதனை செய்து, முக்கிய ஆவணங்களைப் பறிமுதல் செய்தனர். மேலும் இந்த வழக்கு தொடர்பாக, அமைச்சர் விஜயபாஸ்கரின் உதவியாளர் சரவணனிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை செய்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கில் இன்று விசாரணைக்கு ஆஜராகுமாறு தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா ஆகியோருக்கு தில்லி சிபிஐ அதிகாரிகள் அழைப்பாணை அனுப்பியிருந்தனர். இதன்படி முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சிபிஐ ஊழல் தடுப்புப் பிரிவு அலுவலகத்தில் இன்று ஆஜராகியுள்ளார்.