குட்கா ஊழல் : அமைச்சரிடம் சிபிஐ 9 மணி நேரம் விசாரணை

குட்கா ஊழல் வழக்குத் தொடர்பாக, அமைச்சர் சி.விஜயபாஸ்கர், முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா உள்ளிட்ட 3 பேரிடம் சிபிஐ அதிகாரிகள் சனிக்கிழமை 9 மணி நேரம் விசாரணை நடத்தினர்.
குட்கா ஊழல் : அமைச்சரிடம் சிபிஐ 9 மணி நேரம் விசாரணை

குட்கா ஊழல் வழக்குத் தொடர்பாக, அமைச்சர் சி.விஜயபாஸ்கர், முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா உள்ளிட்ட 3 பேரிடம் சிபிஐ அதிகாரிகள் சனிக்கிழமை 9 மணி நேரம் விசாரணை நடத்தினர்.
வருமான வரித் துறையினர் கடந்த 2016-இல் சென்னை செங்குன்றத்தில் உள்ள குட்கா கிடங்கில் சோதனை நடத்தினர்.  அங்கு கிடைத்த ரகசிய டைரியில் அமைச்சர் சி.விஜயபாஸ்கர், சென்னை காவல்துறையின் அப்போதைய ஆணையரும், இப்போதைய டிஜிபியுமான தே.க.ராஜேந்திரன், ஓய்வு பெற்ற டிஜிபி எஸ்.ஜார்ஜ் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பெயர்களுடன்,  அவர்களுக்கு  கொடுக்கப்பட்டிருந்த பணம் குறித்தும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும் இதுதொடர்பாக கிடங்கு உரிமையாளர்கள் மாதவ ராவ், சீனிவாச ராவ், உமாசங்கர் குப்தா, மத்திய கலால் அதிகாரி என்.கே.பாண்டியன் உள்ளிட்டோரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர்.
வாடகை காரில் வந்த அமைச்சர்: இந்நிலையில் கடந்த வாரம் அமைச்சர் விஜயபாஸ்கரின் உதவியாளர் சரவணனிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா ஆகியோர் விசாரணைக்கு ஆஜராக தில்லி சிபிஐ அழைப்பாணை அனுப்பியது.
 இதனை ஏற்று, அமைச்சர் விஜயபாஸ்கர், அவரது உதவியாளர் சரவணன், முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா ஆகியோர் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சிபிஐ ஊழல் தடுப்புப் பிரிவு அலுவலகத்தில் சனிக்கிழமை ஆஜரானார்கள்.
மூவரிடமும் தில்லி சிபிஐ அதிகாரிகள் தனித்தனியாக விசாரணை செய்தனர்.  இதற்காக பி.வி.ரமணா, சரவணன் ஆகியோர் காலை 10.30 மணியளவில் வந்தனர்.  முன்னதாக காலை 8.30 மணிக்கே வாடகைக் காரில் விஜயபாஸ்கர்  சிபிஐ அலுவலகத்துக்கு வந்தார். 
9 மணி நேரம் விசாரணை: சிபிஐ அதிகாரிகள், விஜயபாஸ்கரிடமும், ரமணாவிடமும் ஏற்கெனவே தயாரித்து வைக்கப்பட்டிருந்த கேள்விகளின் அடிப்படையில் விசாரணை செய்தனர். விஜயபாஸ்கரிடம் அவரது உதவியாளர் சரவணன், மாதவராவ் ஆகியோர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் விசாரணை நடைபெற்றது. விசாரணையில், விஜயபாஸ்கரும், ரமணாவும் அளித்த தகவல்களை வாக்குமூலமாக சிபிஐ அதிகாரிகள் பதிவு செய்தனர். சரவணனிடம் சிபிஐ அதிகாரிகள் தனியாக விசாரணை மேற்கொண்டனர். 
காலை தொடங்கிய விசாரணை இரவு 7.30 மணி வரை சுமார் 9 மணி நேரம் நடைபெற்றது. இதில் குட்கா ஊழல் தொடர்பாக பல முக்கியத் தகவல்கள் கிடைத்திருப்பதாக சிபிஐ தரப்பில் கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com