தென்கிழக்கு வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் சனிக்கிழமை மாலை வலுவடைந்து, புயலாக உருவானது. இந்த புயலுக்கு "பெய்ட்டி' என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இது அடுத்த 24 மணி நேரத்தில் தீவிர புயலாக மாறவுள்ளது. ஆந்திர கடலோரம் மசூலிப்பட்டினம்-காக்கிநாடா இடையே திங்கள்கிழமை (டிச.17) பிற்பகலில் கரையைக் கடக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் காரணமாக, சென்னை உட்பட வடதமிழகத்தில் ஒரு சில இடங்களில் ஞாயிற்றுக்கிழமை மிதமான மழையும், ஓரிரு இடங்களில் பலத்த மழையும் பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், சென்னையில் காசிமேடு, திருவொற்றியூர், எண்ணூர் உள்ளிட்ட பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியளவில் மழை பெய்தது. காசிமேடு, எண்ணூர், திருவொற்றியூர் பகுதிகளில் கடல் கடுமையான சீற்றத்துடன் காணப்படுகிறது.
அதுபோன்று நாகை மாவட்டம் வேதாரண்யம், ஆறுகாட்டுத்துறை, புஷ்பவனம், கோடியக்கரை, வெள்ளப்பள்ளம் உள்ளிட்ட பகுதிகளிலும் கடல் கடுமையான சீற்றத்துடன் காணப்படுகிறது. புதுச்சேரி யூனியன் பிரதேசத்தைச் சேர்ந்த ஏனம் மாவட்டமும் இந்தப் புயலால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.