மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணைக்காக, நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தின் முன் சுகாதாரத் துறைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் வெள்ளிக்கிழமை ஆஜரானார்.
பல்வேறு ஆவணங்களுடன் வந்த அவர், அவற்றை ஆணையத்தில் சமர்ப்பித்ததாகத் தெரிகிறது. மேலும், ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் தொடர்பாகவும், ஜெ.ராதாகிருஷ்ணன் சில தகவல்களைத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
அதேபோன்று, போயஸ் தோட்ட இல்லத்தில் பணியாற்றி வந்த மூன்று பெண்களிடமும் நீதிபதி ஆறுமுகசாமி வெள்ளிக்கிழமை விசாரணை நடத்தினார். அவர்களது விளக்கங்கள் அனைத்தும் வாக்குமூலமாகப் பதிவு செய்யப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், ஜெயலலிதாவை வெளிநாட்டு சிகிச்சைக்கு அழைத்து செல்வது தொடர்பாக அமைச்சரவைக்கு அப்போதைய தலைமைச் செயலாளர் ராமமோகன் ராவ் எவ்வித குறிப்போ, கடிதமோ அதிகாரப் பூர்வமாக அனுப்பவில்லை என்று ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்துக்கு, தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் பதில் கடிதம் அனுப்பியுள்ளார்.