போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் பதவிகளில் பொறுப்பு அதிகாரிகளாக அனுபவம் இல்லாதவர்களை நியமித்து போக்குவரத்து துறையை அமைச்சர் முடக்கியுள்ளதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக சனிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் நிர்வாகத்தைச் சீரழிக்கும் வகையில் மேலாண் இயக்குநர் பதவிகளில் ஜூனியர் அதிகாரிகளைப் பொறுப்பு அதிகாரிகளாக நியமித்து, போக்குவரத்துத் துறையை ஸ்தம்பிக்க வைத்துள்ள போக்குவரத்துத் துறை அமைச்சரின் செயலுக்குக் கடும் கண்டனத்தைத் தெரிவிக்கிறேன்.
பணி மூப்பு பட்டியலில் முதலில் இருக்கும் அனுபவம் வாய்ந்தவர்களையெல்லாம் புறக்கணித்து, ஓரங்கட்டி விட்டு, அனுபவம் இல்லாதவர்களையும், மண்டலங்களில் பொது மேலாளராகக் கூட பணியாற்றாதவர்களை மேலாண் இயக்குநர்களாக போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆதாயத்துக்காக நியமித்திருப்பது போக்குவரத்துத் துறையில் மிகப்பெரிய அதிருப்தியை உருவாக்கியுள்ளது.
மதுரையில் பொது மேலாளராக இருப்பவர் கோவைக்கும், சென்னையில் இருப்பவர் விழுப்புரத்துக்கும், ஈரோட்டில் இருப்பவர் மதுரைக்கும் நியமிக்கப்பட்டு, “இரட்டைப் பொறுப்பு” வழங்கப்பட்டு, இன்றைக்கு போக்குவரத்துக் கழக நிர்வாகம் நிலைகுலைந்து போயிருக்கிறது.
இந்தப் பொறுப்பு மேலாண் இயக்குநர்கள் ஏதோ பெயரளவுக்கோ, தற்காலிகமாகவோ நியமிக்கப்படவில்லை. அவர்களுக்கு இந்த பொறுப்பு பதவிக்காக கூடுதலாக ரூ.19 ஆயிரம் மாதாந்திர ஊதியம் வழங்கப்படுகிறது. சம்பந்தப்பட்ட அரசு போக்குவரத்துக் கழகத்தில் பங்குதாரராக ஆக்கப்படுகின்றனர். மேலும் ஒரு மேலாண் இயக்குநருக்கு உள்ள அனைத்து அதிகாரங்களும் வழங்கப்பட்டு நிர்வாகக்குழு கூட்டங்களிலும் பங்கேற்கும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
எனவே, “ஜூனியர்” அதிகாரிகளை பொறுப்பு மேலாண் இயக்குநர்களாக நியமித்ததை உடனடியாக ரத்து செய்து, பணி மூப்பு அடிப்படையில் மூத்த, அனுபவம் உள்ள அதிகாரிகளை அரசு போக்குவரத்துக் கழகங்களின் மேலாண் இயக்குநர்களாக நியமிக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.