பொறியியல், தொழில்நுட்பக் கல்லூரிகள் அனுமதி நீட்டிப்புக்காக, அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கவுன்சிலிடம் (ஏஐசிடிஇ) விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வரும் 5-ஆம் தேதி வரை பொறியியல் கல்லூரிகள் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம்.
நாடு முழுவதும் உள்ள பொறியியல், தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள் ஏஐசிடிஇ-யிடம் ஒவ்வொரு ஆண்டும் அனுமதி பெறுவது அவசியம். அதன் பிறகே, அந்தக் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கையை அந்த கல்வி நிறுவனங்கள் மேற்கொள்ள முடியும். 2018-19 கல்வியாண்டுக்கான அனுமதி, அனுமதி நீட்டிப்புப் பணிகளை ஏஐசிடிஇ தொடங்கியுள்ளது. இதற்காக நாடு முழுவதும் உள்ள பொறியியல், தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களிடமிருந்து கடந்த ஜனவரி 1-ஆம் தேதி முதல் விண்ணப்பங்களை ஏஐசிடிஇ பெற்றது.
விண்ணப்பிக்க ஜனவரி 31 கடைசி நாள் எனவும், அபராதத் தொகையுடன் பிப்ரவரி 5 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் எனவும் ஏஐசிடிஇ முன்னர் அறிவித்திருந்தது. இந்நிலையில், கல்லூரிகள் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை ஏஐசிடிஇ மேலும் நீட்டிப்பு செய்துள்ளது. அதன்படி, அனுமதி நீட்டிப்புக்கான விண்ணப்பத்தை கல்லூரிகள் அபராதத் தொகை இன்றி வரும் 5-ஆம் தேதி வரை சமர்ப்பிக்கலாம். கடைசி தேதிக்குப் பிறகும் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க இயலாத ஏற்கெனவே இயங்கி வரும் கல்வி நிறுவனங்கள் மட்டும், அபராதத் தொகையுடன் பிப்ரவரி 10 ஆம் தேதி வரை விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க முடியும்.