நாட்டறம்பள்ளி அருகே கிராமப் பகுதிக்குள் நுழைந்து, பொதுமக்களை அச்சுறுத்தி வரும் சிறுத்தைப்புலிகளை மீண்டும் காட்டுக்குள் விரட்ட வனத் துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
நாட்டறம்பள்ளியை அடுத்த வெலக்கல்நத்தம், எம்ஜிஆர் நகர் மற்றும் நாயனசெருவை ஒட்டியுள்ள மலைகுண்டு மற்றும் தலைதாப்புமலை காட்டுப் பகுதி அருகே கடந்த சில மாதங்களாக இரவு நேரங்களில் 3 சிறுத்தைப் புலிகள் ஊருக்குள் நுழைந்து, அங்கிருந்த தெரு நாய்களையும், கொட்டகைகளில் கட்டி வைத்திருந்த ஆடுகளையும் கடித்துக் கொன்று, பொதுமக்களை அச்சுறுத்தி வருகின்றன.
இதனையடுத்து, திருப்பத்தூர் வனச்சரக அலுவலர் பரமசிவம் தலைமையிலான வனத் துறையினர் சனிக்கிழமை இரவு முதல் அப்பகுதியில் முகாமிட்டு, சிறுத்தைப் புலிகள் ஊருக்குள் வராமல் இருக்க பட்டாசுகள் வெடித்தும், தீப்பந்தம் கொளுத்தியும் பொதுமக்கள் உதவியுடன் இரவு முழுக்க கண்காணித்து வந்தனர்.
மேலும் திங்கள்கிழமை காலை முதல் 10-க்கும் மேற்பட்ட வனத் துறையினர் காட்டுப் பகுதிக்குள் சென்று, சிறுத்தைப் புலிகளின் நடமாட்டத்தை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். பொதுமக்களின் உதவியுடன் பட்டாசு வெடித்தும், தாரை தப்பட்டை அடித்தும், தீப்பந்தங்களை கொளுத்தியும் மீண்டும் சிறுத்தைப் புலிகளை காட்டுப் பகுதிக்குள் விரட்டி வருகின்றனர்.
இதனால் தொடர்ந்து 4-ஆவது நாளாக வெலக்கல்நத்தம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த கிராம மக்கள் சூழ்ந்துள்ளனர்.