மானிய விலையில் இருசக்கர வாகனம் அளிக்கும் திட்டத்துக்கு விண்ணப்பிக்க வரும் 10-ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும், இந்தத் திட்டத்தின் கீழ், இதுவரை 1.74 லட்சம் மகளிர் விண்ணப்பித்துள்ளனர்.
இந்தத் திட்டத்துக்கு மகளிர் மத்தியில் ஏற்பட்டுள்ள ஆர்வத்தைத் தொடர்ந்து விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதியை பிப்ரவரி 10-ஆம் தேதி வரை தமிழக அரசு நீட்டித்து அறிவித்துள்ளது.
மகளிர் பணியிடங்களுக்கு எளிதில் செல்லும் வகையில் இரு சக்கர வாகனம் வாங்குவதற்காக தமிழக அரசு 50 சதவீத மானியம் வழங்கும் திட்டத்தை அதிமுகவின் தேர்தல் வாக்குறுதியாக ஜெயலலிதா அறிவித்தார்.
இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவற்கான பணியில் தமிழக அரசு தீவிரமாக இருந்து வருகிறது. ஜெயலலிதாவின் பிறந்தநாளான பிப்ரவரி 24-ஆம் தேதி இந்தத் திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்க உள்ளார்.
1.74 லட்சம் பேர் மனு: மானியம் பெறுவதற்கான விண்ணப்பங்கள் மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி, நகராட்சி அலுவலகங்களில் ஜனவரி 22-ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் பெறப்பட்டு வருகின்றன. பிப்ரவரி 5-ஆம் தேதி வரை சென்னையில் 22 ஆயிரத்து 963 மகளிர், கோயம்புத்தூரில் 11 ஆயிரத்து 23 பேரும், ஈரோட்டில் 11 ஆயிரத்து 691 பேர் என தமிழகம் முழுவதும் ஒரு லட்சத்து 74 ஆயிரத்து 678 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.
அவகாசம் நீட்டிப்பு: மேலும், இந்தத் திட்டத்தில் பயன்பெற பிப்ரவரி 5-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்திருந்தது. ஆனால், மகளிர் மத்தியில் இந்தத் திட்டத்துக்கு ஏற்பட்டுள்ள ஆர்வத்தைத் தொடர்ந்து பிப்ரவரி 10-ஆம் தேதி மாலை 5 மணி வரை மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள், மாநகராட்சி மண்டல அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களில் விண்ணப்பங்களை இலவசமாகப் பெற்று பூர்த்தி செய்து அளிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.