ஸ்ரீவில்லிபுத்தூர்: ஆண்டாள் பற்றிக் கட்டுரை எழுதிய கவிஞர் வைரமுத்துவைக் கண்டித்து மீண்டும் நாளை முதல் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் ராமானுஜ சடகோபன் அறிவித்துள்ளார்.
கவிஞர் வைரமுத்து 'தமிழை ஆண்டாள்' என்ற தலைப்பில் எழுதிய கட்டுரை வெளியாகி பெரும் சர்ச்சையினைக் கிளப்பியது. இதன் காரணமாக ஆண்டாள் பக்தர்களின் மனதினை புண்படுத்தி விட்டதாக அவருக்கு எதிராக கண்டனக் குரல்கள் எழுந்தன.
அத்துடன் ஆண்டாள் பற்றிக் கட்டுரை எழுதிய கவிஞர் வைரமுத்து ஸ்ரீவில்லிபுத்தூர் வந்து ஆண்டாள் சந்நிதியில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோரி, ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் ராமானுஜ சடகோபன் முதலில் உண்ணாவிரதமிருந்தார். பின்னர் காவல்துறையினர் நடத்திய பேச்சுவார்த்தையினைத் தொடர்ந்து தனது உண்ணாவிரதத்தினைக் கைவிட்டார்.
இந்நிலையில் கவிஞர் வைரமுத்துவைக் கண்டித்து மீண்டும் நாளை முதல் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் ராமானுஜ சடகோபன் அறிவித்துள்ளார். இதனால் மீண்டும் பரபரப்பான சூழல் உருவாகியுள்ளது.