அம்மா ஸ்கூட்டர்: விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்

மானியத்துடன் கூடிய தமிழக அரசின் ஸ்கூட்டர் பெறுவதற்காக விண்ணப்பிக்க சனிக்கிழமை (பிப்.10) கடைசி நாளாகும். 
அம்மா ஸ்கூட்டர்: விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்

மானியத்துடன் கூடிய தமிழக அரசின் ஸ்கூட்டர் பெறுவதற்காக விண்ணப்பிக்க சனிக்கிழமை (பிப்.10) கடைசி நாளாகும். 
மகளிர் எளிதாகப் பணிகளுக்குச் செல்லும் வகையில் இரு சக்கர வாகனம் வாங்குவதற்கு 50 சதவீதம் மானியம் வழங்கப்படும் என்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தார். இந்தத் திட்டத்தை நிறைவேற்றுவதற்கான பணிகளில் தமிழக அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
இத்திட்டத்தில் பயன்பெற மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி, நகராட்சி அலுவலகங்களில் மகளிர் ஆர்வத்துடன் விண்ணப்பித்து வருகின்றனர். பிப்.5-ஆம் தேதி வரை தமிழகம் முழுவதும் 1.74 லட்சம் மகளிர் விண்ணப்பித்தனர். மேலும், விண்ணப்பிக்கக் கூடுதல் கால அவகாசம் வேண்டும் என்று மகளிரிடம் இருந்து கோரிக்கை எழுந்தது. அதைத் தொடர்ந்து பிப்.10-ஆம் தேதிவரை விண்ணப்பிக்க தமிழக அரசின் சார்பில் கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. அரசு அளித்த அவகாசத்துக்கு இன்னும் இரு தினங்களே உள்ள நிலையில் பலர் ஆர்வத்துடன் விண்ணப்பித்து வருகின்றனர்.
ஜெயலலிதாவின் பிறந்த தினமான பிப்.24-ஆம் தேதி இந்தத் திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்க உள்ளார்.
பழகுநர் உரிமம்: மானியத்துடன் ஸ்கூட்டர் பெறும் திட்டத்துக்கு விண்ணப்பிக்க பழகுநர் உரிமம் தேவை என்பதால், அதனைப் பெறுவதற்கு மகளிர் தொடர்ந்து ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால், வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள், மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகங்களில் மகளிரின் கூட்டம் அதிகரித்து வருகிறது. இந்த அலுவலகங்கள் சனி, ஞாயிறு விடுமுறை என்பதால் வெள்ளிக்கிழமை கடைசி வேலை நாளாகும். அதன்படி, வெள்ளிக்கிழமை (பிப். 9) வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் பெண்கள் அதிகளவு சென்று பழகுநர் உரிமம் பெற விண்ணப்பம் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com