திருநெல்வேலி மாவட்டத்தில் சு.திருநாவுக்கரசர் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது, அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக் கொடி காட்டிய 7 பேர் காங்கிரஸ் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக சு.திருநாவுக்கரசர் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
நெல்லை மாநகர காங்கிரஸ் கமிட்டி மற்றும் நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் பரிந்துரையை ஏற்று, காங்கிரஸ் கட்சிக்கு பொது மக்கள் மத்தியில் களங்கம் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்ட நெல்லை மாநகரைச் சேர்ந்த எஸ்.வேணுகோபால், எஸ்.சிவசுப்பிரமணியன், எல்.ஆஷாத் பாதுஷா, அந்தோணி செல்வராஜ், ராகுல் முருகன் ஆகியோர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து தாற்காலிகமாக நீக்கப்படுகின்றனர். நெல்லை கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்த நாங்குநேரி முத்துக்கிருஷ்ணன், எஸ்.பேரின்பபுரம் ஜெனி ஆகியோரும் தாற்காலிகமாக கட்சியிலிருந்து நீக்கி வைக்கப்படுகின்றனர். இவர்களுடன் காங்கிரஸார் யாரும் எவ்வித அரசியல் தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது என்று அவர் கூறியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட 7 பேரும் திருநெல்வேலி மாவட்டத்தில் சு.திருநாவுக்கரசர் பிப்ரவரி 4-ஆம் தேதி சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது, அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கருப்புக் கொடி காட்டியுள்ளனர். அதைத் தொடர்ந்து 7 பேரும் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.