நாகை மாவட்டம், வேதாரண்யம் கடற்கரையில் இறந்த நிலையில் டால்பின் ஒன்று கரை ஒதுங்கிய விவரம் வெள்ளிக்கிழமை தெரியவந்தது.
வேதாரண்யம் மற்றும் கோடியக்கரை கடல் பரப்பில் சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை அதிக எண்ணிக்கையிலான டால்பின்கள் காணப்படும். ஆனால், கடல் சூழல் உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் கரைக்கு அருகில் டால்பின்களைக் காண்பது படிப்படியாக குறைந்து வந்தது. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக பெயரளவிலான டால்பின்களையே காணமுடிகிறது.
இந்நிலையில், வேதாரண்யம், மணியன்தீவு கடற்கரையில் இறந்த நிலையில் டால்பின் ஒன்று வெள்ளிக்கிழமை கரை ஒதுங்கியது. இது சுமார் 7 அடி நீளத்தில் காணப்பட்டது. மீனவர்கள் அளித்த தகவலை அடுத்து அங்கு சென்ற கோடியக்கரை வனத்துறையினர், இறந்த டால்பினை கரையில் புதைத்தனர்.