தமிழக அரசின் சார்பில் மட்டுமே மணல் இறக்குமதி செய்து குறைந்த விலைக்கு விற்பனை செய்ய வேண்டும் என மன்னார்குடியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மாவட்ட கட்டுமானத் தொழிலாளர்கள் சங்க ஆண்டு பேரவைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சங்க முன்னாள் நிர்வாகி ஜி. ராமகிருஷ்ணன் நினைவரங்கில் நடைபெற்ற ஆண்டு பேரவைக் கூட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் என். அன்பழகன் தலைமை வகித்தார்.
சிஐடியு மாவட்டச் செயலர் டி. முருகையன், நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார்.
சங்கத்தின் கொடியை சு. ராமலிங்கம் ஏற்றி வைத்தார். தியாகிகள் நினைவு ஸ்தூபியை வேணு. ராஜதுரை திறந்து வைத்தார். வேலை அறிக்கையை மாவட்டச் செயலர் பி. நடராஜனும், வரவு - செலவு அறிக்கையை மாவட்ட பொருளாளர் க. காளிமுத்தும் வாசித்தனர்.
மணலுக்குப் பதிலாக கட்டுமானப் பணிக்கு பயன்படுத்தப்படும் எம். சாண்ட், தட்டுப்பாடின்றி கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கட்டுமானத் தொழிலாளர்கள் இயற்கை மரணம் அடைந்தால் ரூ. ஒரு லட்சமும், விபத்தில் பாதிக்கப்படுபவர்களுக்கு ரூ. 5 லட்சமும் நிவாரணம் வழங்கிட வேண்டும். ஓய்வூதிய வயது வரம்பை பெண்களுக்கு 55 ஆக குறைப்பதுடன், ஓய்வூதியமாக ரூ. 4 ஆயிரம் வழங்க வேண்டும்.
மற்ற மாநிலங்களைப் போன்று, பண்டிகைக் கால போனஸ், வீடுகட்ட மற்றும் கல்விக் கடன் வழங்கிட வேண்டும். மாவட்ட தொழிலாளர் நல அலுவலகத்தை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்துக்கு இடமாற்றம் செய்ய வேண்டும். கட்டுமானப் பொருள்கள் விலை உயர்வைக் கட்டுப்படுத்திட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
சிறப்பு அழைப்பாளராக அமைப்பின் அகில இந்திய தலைவர் ஆர். சிங்காரவேலு கலந்துகொண்டார்.
கூட்டத்தில் மாநில துணைத் தலைவர் இ.டி.எஸ். மூர்த்தி, சிஐடியு மாவட்ட பொருளாளர் எம்.பி.கே. பாண்டியன், நகரத் தலைவர் டி. பாலகிருஷ்ணன், செயலர் வேணு. ராஜதுரை, பொருளாளர் கா. மகாதேவன், உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக் குழு நிர்வாகிகள் எம். நீலாவதி, ஆர். விஜயா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.