தஞ்சாவூர் சரசுவதி மகால் நூலகத்தில் மராத்தி மொழி, மோடி ஆவணம் குறித்த இரு நாள் தேசியக் கருத்தரங்கம் பிப். 22-ம் தேதி தொடங்குகிறது.
இதுகுறித்து ஆட்சியரும், சரசுவதி மகால் நூலக இயக்குநருமான ஆ. அண்ணாதுரை தெரிவித்திருப்பது: தஞ்சாவூர் சரசுவதி மகால் நூலகத்தில் மராத்தி மொழி, மோடி ஆவண தேசிய ஆய்வுக் கருத்தரங்கம் பிப். 22, 23-ம் தேதிகளில் நடைபெறுகிறது.
ஆண்டுதோறும் நூலகத்தின் மூலம் நடத்தப்படும் மராத்தி மொழி, மோடி எழுத்துப் பயிற்சி வகுப்பில் பங்கேற்ற நூற்றுக்கும் அதிகமான பயிற்சியாளர்களைக் கொண்டும், அரசியல், அரசின் முக்கிய குறிப்புகள், வரலாறு, கலை, இலக்கியம், மருத்துவம் போன்ற பல்வேறு துறைகளைச் சார்ந்த கருத்துகளைத் தன்னுள் கொண்ட மோடி ஆவணங்களில் உள்ள செய்திகளை இத்துறையில் புலமைப் பெற்ற மராத்தி மொழி இலக்கிய வல்லுநர்கள், மோடி வல்லுநர்களிடமிருந்து கட்டுரைகள் பெறப்படவுள்ளன.
இந்த கருத்தரங்கத்தில் நூலகத்தில் உள்ள மராத்திய இலக்கியங்கள், மராத்திய மன்னர்களின் நாடகங்கள், இசை நூல்கள், மோடி ஆவண கடிதம் மற்றும் அதில் உள்ள வரலாற்றுச் சான்றுகள், தஞ்சை மோடி ஆவணம், மகாராஷ்டிராவில் உள்ள மோடி ஆவணங்களின் வேறுபாடுகள் போன்ற தலைப்புகளில் கருத்தரங்கம் நடத்தப்படவுள்ளது.