தமிழகத்தில் எய்ம்ஸ் அமையவுள்ள இடத்தை அறிவிக்க காலதாமதம் ஆவதற்கான காரணம் குறித்து மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை புதன்கிழமை உத்தரவிட்டது.
தமிழகத்தில் மூவாயிரம் நோயாளிகளுக்கு ஒரு மருத்துவர் என்ற நிலை உள்ளது. இதனால் ஏழைகள் தரமான சிகிச்சை பெற முடியாத நிலை நீடிக்கிறது. இதற்குத் தீர்வாக அனைத்து வசதிகளுடன் கூடிய எய்ம்ஸ் மருத்துவமனையை தமிழகத்தில் அமைக்க வேண்டியது அவசியம். தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான அனைத்து கட்டமைப்பு வசதிகளும் மதுரையில் உள்ளது. தென்மாவட்டங்களின் மையப்பகுதியாக விளங்கும் மதுரையில் எய்ம்ஸ் அமைந்தால் அனைவருக்கும் உதவியாக இருக்கும். ஆனால், இதுவரை தமிழகத்தில் எய்ம்ஸ் அமையவுள்ள இடம் எது என அறிவிக்கப்படவில்லை.
எனவே தமிழகத்தில் எய்ம்ஸ் எங்கு அமைய உள்ளது என்பது குறித்து விளக்கம் அளிக்க மத்திய சுகாதாரத்துறைச் செயலருக்கு உத்தரவிட வேண்டும் என்று மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு செய்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், தமிழகத்தில் எய்ம்ஸ் அமைய உள்ள இடத்தை 2016 டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது. ஆனால், இதுதொடர்பாக மத்திய அரசு எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. எனவே மத்திய அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக்கோரி மனுதாரர் மற்றொரு மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், ஆர்.ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு வழக்குரைஞர் வாதிடுகையில், இது நீண்ட நடைமுறை என்பதால் மேலும் 3 மாத காலம் கூடுதல் அவகாசம் வழங்க வேண்டுமென கோரினார்.
இதையடுத்து நீதிபதிகள் தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் இடத்தை அறிவிக்க காலதாமதம் ஆவதற்கான காரணம் குறித்தும், தமிழக அரசு பரிந்துரைத்த 5 இடங்கள் மீதான சாதக, பாதகங்கள் குறித்தும் மத்திய அரசு ஜூன்14ஆம் தேதிக்குள்ளாக பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஜூன் 15ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.